tamilnadu

img

தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றி - சிகரம்.ச.செந்தில்நாதன்

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு வழக்கு 

தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை நிராகரித்து சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே சமயம் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு எந்தச் சிறப்பு அந்தஸ்தும் தராமல் தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இது தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றி; சமஸ்கிருதத்திற்குக் கிடைத்த முதல் தோல்வி. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால கோயில்கள் அனைத்திலும் குட முழுக்கு மற்றும் கோயில் கிரியைகளில் வடமொழி மட்டுமே கோலோச்சும் நிலையில் தமிழும் சமநிலையில் வைக்கப்படுவது ஒரு முக்கிய மாற்றமாகும்.

சமஸ்கிருத குடமுழுக்குக்கும் ஆதாரமில்லைதானே

நீதிமன்றத் தீர்ப்புகளை நியாயமான விமர்சனங்களுக்கு உட்படுத்தலாம். உள்நோக்கம் தான் கற்பிக்கக் கூடாது. ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேறொரு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதே ஒரு விமர்சனம் தானே? தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராஜ ராஜ சோழன் தமிழில்தான் குடமுழுக்கு நடத்தினான் என்பதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரம் இல்லை என்று தீர்ப்பு கூறுகிறது. அதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டால், சமஸ்கிருதத்தில் இராஜ ராஜன் குடமுழுக்கு நடத்தினான் என்பதற்கும் ஆதாரம் இல்லை தான். என்றாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு வரலாற்று உண்மை உண்டு. அதை நிராகரிக்க முடியாது. 

தில்லைக் கோயிலில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த தேவாரப் பாடல்களை மீட்டவன் இராஜ ராஜன். நம்பியாண்டார் நம்பியை அதைத் தொகுக்கச் சொன்னவன்; கோயில்களில் ஓதச் சொன்னவன் அவன் தான். அதனால் திருமுறை கண்ட சோழன் என்ற பட்டப் பெயர் பெற்றவன்  அவன். தமிழுக்கான இந்த ஆதாரங்கள் கூட சமஸ்கிருதத் திற்குக் கிடையாது. ஆதிசிவன் பெற்ற மொழி தமிழ் என்பான் பாரதி. சொற்றமிழால் சிவன் தன்னைப் பாடச் சொன்னதாக சுந்தரர் சொல்வார். கடைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவன் சிவன் என்பர்.  அது மட்டும் அல்ல சிவனே ஒரு தமிழ்க் கவிஞன். பாண்டிய மன்னனிடம் பரிசு பெற தருமிக்குப் பாட்டு எழுதிக் கொடுத்து அனுப்பி, அதில் குறைகண்ட நக்கீரரிடம் வாதம் செய்தவன். ஆகமம் அருளியவன் சிவன் என்பர். தமிழ் வேறு சிவன் வேறு அல்ல. இதை எல்லாம் முற்றாக நிராகரிக்க முடியுமா? தீர்ப்பைப் படிக்கும் போது இந்தக் கேள்வி எழுகிறது.

ஆகமம் பற்றி வாதங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை

ஆகமம் பற்றிய வாதங்களை உயர்நீதிமன்றத் தீர்ப்பு கவனத்திலேயே கொள்ளவில்லை. நீதியரசர் ஏ.கே.ராஜன், நீதியரசர் எஸ்.மகாராஜன் அளித்த அறிக்கைகளை வாதத்தின் போது சமர்ப்பித்தும் நீதிமன்றம் பரிசீலிக்கவே இல்லை. இவை  அரசால் ஏற்கப்பட்ட அறிக்கைகளாகும். ஆகமம் தமிழில் தான் இருந்தது என்பதையும், ஆகமத்திற்கு மொழி, சாதி கிடையாது என்ற உண்மையையும், ஆகம மரபு தமிழர் மரபு என்பதையும், ஆகமம் மாறும் என்பதையும் நீதிமன்றம் பார்க்க மறுத்தது வேதனைக்குரியது.  பண்டாரங்கள் பூசை செய்த பழநி கோயி லில், குருக்கள் நுழைந்தது, மார்கழியில் கள்ளழகர் வைகை யில் இறங்கியது சித்திரை முதல் தேதியாக மாற்றப்பட்டது எல்லாம் ஆகம மாற்றம் இல்லையா? சனவரி முதல் தேதியாக ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவது, ஆகம மீறல் இல்லையா? 

தஞ்சை மண் தமிழர்கள் மட்டும் அல்லாமல், நாயக்கர்க ளாலும், மராட்டியர்களாலும் ஆளப்படவில்லையா? அப்போது நேர்ந்த மாற்றங்கள், மாற்றங்கள் இல்லையா? எல்லா வற்றிற்கும் மேல், ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று ஆகமங்கள் கூறியபோது, ஆலய நுழைவுச் சட்டம் ஆகமத்தைத் தூக்கிக் கடலில் போடவில்லையா? மாறாதது எதுதான் இருக்கிறது? அரசியல் சட்டம் மாற வில்லையா? 

தமிழில் வழிபடவும், தமிழ்க் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யவும் அரசியல் சட்டத்தின் எந்தக் கூறு தடை யாய் இருக்கிறது? அரசியல் சட்டத்தின் 25-ஆவது கூறு தடையாக இருக்கிறது என்று தீர்ப்புச் சொல்ல முடியுமா? அரசியல் சட்டத்தின் வெளிச்சத்திலும், ஆகமம் பற்றிய கருத்து நிலையிலும் வழக்கின் கோரிக்கையை நீதிமன்றம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டாமா? தமிழ் சொந்த மொழி, வடமொழி வந்த மொழி! இதில் தமிழனின் கலாச்சார உரிமை, சமய உரிமை அடங்கியிருக்கிறது என்பதை நீதிமன்றம் பார்க்கா மல் போனது சரியா? தகுமா?

நல்ல வேளையாக தமிழக அரசு குடமுழுக்கில் திருமுறை கள் முக்கியத்துவம் பெறும் என்று உறுதி அளித்தது. இந்த உறுதிமொழியும் இல்லாது போனால் தீர்ப்பின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போது மேனி நடுங்குகிறது. குடமுழுக்கில் தமிழன் உரிமை கேட்டு போராட்டங்களும், வழக்குகளும் இல்லாதிருந்தால் தஞ்சைக் கோயிலில், திருமுறைகள் “துக்கடாப் பாட்டாக” போயிருக்கும். அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு போராட்டங்களும் வழக்குகளுமே காரணம்.

கெட்டதில் ஓர் நல்லது

கெட்டதிலும் ஒரு நல்லது! தீர்ப்பின் கடைசியில் வடமொழிக்கு எந்த சிறப்பிடமும் கிடையாது என்றும் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் சொல்லப் பட்டுள்ளது! இது வரவேற்கத்தக்கது. இதைச் சொன்ன பிறகு ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்று ஏன் சொல்ல வேண்டும்? தீர்ப்பு வழங்கும் மரபுப்படி ரிட் மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன என்று ஏன் சொல்லக்கூடாது? இப்போது தஞ்சைப் பெரிய கோயிலில் குட முழுக்கு முடிந்துவிட்டது. 

தீர்ப்பை நிறைவேற்றுவதில் சில குறைபாடுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், குடமுழுக்கில் தமிழ் மந்திரம் ஒலித்தது. பிராமண சிவாச்சாரியார்கள் அல்லாமல் ஓதுவார்களும் கலசங்கலில் “ நன்னீர் ” பொழிந்திருக்கி றார்கள். நமக்குக் கிடைத்த இந்த வெற்றியைத் தொடர் வெற்றி யாகவும், முழு வெற்றியாகவும் மாற்ற வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், வெல்வது நிச்சயம்.

    எப்படியோ, தமிழ் சமாதியிலிருந்து மீண்டுவிட்டது.
    கையில் தீர்ப்பும் ஓர் ஆயுதம்!
    வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!