தஞ்சாவூர்: அரியானா மாநிலம் ரோத்தாஜ் மாவட்டத்தில் உள்ள மகரிஷி திவ்யானந்தா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் குவான்சிடோ என்ற தற்காப்புக் கலை போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் 200 க்கும் அதிகமான தற்காப்புக் கலை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், அகில இந்திய பயிற்சியாளர்கள் தேர்வு, அகில இந்திய நடுவர் மற்றும் கருப்பு பட்டைகள் வழங்குதல் ஆகியன நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கந்தமூர்த்தி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மூவரும் சர்வதேச பயற்சியா ளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் ஷேக் அப்துல்லா (வயது 21) அரசு பள்ளிகளில் பயின்று வரும் கிராமப் புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு அனைத்து விதமான விளையாட்டு பயிற்சி களையும் கற்றுக் கொடுப்பதுடன் அம்மாணவர்களை மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்கச் செய்து, அவர்கள் பல பதக்கங்களை பெறுவதற்கு பயிற்சி வழங்கி வருகிறார்.