tamilnadu

மண் வளம் மேம்பட சணப்பு பயிரிடலாம் வேளாண் அதிகாரி தகவல்

தஞ்சாவூர் செப்.1- பயிர்கள் தொடர்ந்து சாகுபடி செய்து வருவதால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சத்துக்கள் குறைந்து வளமற்ற தன்மையினை அடைவதுடன் மண்ணின் பௌதீக மற்றும் இரசாயன அமைப்பில் சிதைவுகள்(மாற்றங்கள்) ஏற்பட்டு காலப்போக்கில் சாகுபடிக்கு பயனற்ற நிலமாக மாறுகிறது.  எனவே, மண்ணின் வளம் குன்றாமல் இருக்க தொடர்ந்து ஒரே வகை பயிரினை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மாற்று பயிரினை சாகுபடி செய்து பயிர் சுழற்சி முறையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தற்சமயம் பேராவூரணி வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்யப்படும் இடங்கள் போக மீதியுள்ள ஒரு போக சம்பா சாகுபடி செய்யப்படும் இடங்கள் பெரும்பாலும் தரிசாகவே உள்ளது. அது போன்ற இடங்களிலும், பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவு உண்டாகக் கூடிய களர்- உவர் நிலங்களிலும், தென்னை சாகுபடி செய்துள்ள தோப்புகளிலும் பசுந்தாளுரப் பயிரான சணப்பு சாகுபடி செய்வதற்கு இப்பருவமே ஏற்ற தருணமாகும்.  தற்சமயம் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இம்மழையின் ஈரத்தை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு தேவையான 16- 20 கிலோ சணப்பு விதையினை விதைப்பு செய்து அவை வளர்ச்சியடைந்து சரியாக 45-வது நாளில் பூத்து குலுங்கி நிற்கும் போது டிராக்டர் கொண்டு மடக்கி உழுது பசுந்தாளுரப் பயிரினை நன்கு உழுது மக்கச் செய்ய வேண்டும். இதனால் சீர்கெட்டு கிடக்கும் எப்பேர்பட்ட நிலமும் இயற்கை வளம் நிறைந்த நிலமாக மாறும். எனவே, நெல் நடவு சாகுபடி செய்ய தயாராகும் அனைத்து விவசாயிகளும் இப்பருவத்தில் பசுந்தாள் உரப்பயிரான சணப்பு பயிரிட்டு பயன் பெறலாம் என பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார்.