tamilnadu

img

தனித்தனியே மூளை மா.முத்துசாமி

தனித்தனியே மூளை மா.முத்துசாமி

அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினார்கள் . அனைத்து பேரக் குழந்தைகளும் தாத்தாவை சூழ்ந்து கொண்டு, “தாத்தா தாத்தா எங்களுக்கு ஒரு கதை சொல்லு தாத்தா” என்று நச்சரித்தனர். “சரி. எல்லாரும் வட்டமாக உட்காருங்க. நான் ஒரு நல்ல கதையா சொல்றேன்” என்று ஆரம்பித்தார். உடனே ஒரு குறும்புக்கார பேரன்”ஏந்தாத்தா, நீங்க இவ்வளவு நாளா சொன்னதெல்லாம் மோசமான கதை தானா? இன்னைக்கு தான் நல்ல கதை சொல்ல போறீங்களா என்று குறுக்கு கேள்வி கேட்டான். உடனே ஆறாம் வகுப்பு படிக்கும் பேத்தி, “அட தாத்தாவெ கதை சொல்ல விடுங்கப்பா . குறுக்க குறுக்க பேசினா, தாத்தா கதை சொல்லாம போயிடப் போறாரு” என்றாள். “தாத்தா கதை சொல்லாம நம்மள மீறிப் போயிடுவாரா . நாம தா அவர விட்டுருவோமா” என்றான் மூணாம் வகுப்பு படிக்கும் பேரன். “சரி ,சரி ஒருத்தருக்கு ஒருத்தர் சத்தம் போடாதீங்கப்பா” என்று சொல்லிவிட்டு, ஒரு கோயிலில் கொள்ளை அடிக்க வந்த வெள்ளைக்காரன் அங்கு இருக்கின்ற நகை நட்டுகளை எல்லாம் அள்ளிக்கொண்டு சாமி சிலையை தூக்கி கொண்டு போய் நடுக்கடலில் போட்டு விட்டு போய்விட்டான். அன்னைக்கு ராத்திரி சாமி, அந்த ஊர் பெரியதனக்காரரின் கனவில் வந்தார் . “அந்த வெள்ளைக்கார கொள்ளைக்காரனுக என்னைக் கொண்டு வந்து நடுக்கடலில் போட்டுட்டு போயிட்டானுக . நான் நடுக்கடலில் கெடக்கிறேன் . என்னை வந்து தூக்கி கொண்டு போய் பழையபடி கோயிலில் வையுங்க “என்று சொன்னதாக ஊர் கூட்டத்தில் கூறினார். உடனே ஏழாம் வகுப்பு படிக்கும் பாண்டி குறுக்கிட்டு, “ஏந்தாத்தா அந்த சாமிக்கு நீச்சல் தெரியாதா ? இல்ல. இந்த சாமி பார்த்து கடல்ல இருந்து எந்திரிச்சு வந்துற முடியாதா ? அந்த சாமி தானே நம்மள எல்லாத்தையும் காப்பாத்துறாரு னு நீங்க சொல்லுவீங்க. ஆனா அந்த சாமியக் காப்பாத்துறதுக்கு வேற ஆளுங்க தேவைப்படுதா?” என்று கேட்டான். உடனே “அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லப்படாதப்பா சாமி கண்ணெக் கெடுத்துப்புடும்” என்று தாத்தா சொல்ல”கெடுதல் செய்யறவங்களையெல்லாம் கண்ணக் கெடுக்கிற மாதிரி இருந்துச்சுனா , கிட்டத்தட்ட 100 க்கு 90 பேருக்கு மேல கண்ணு தெரியாம தான் அலைய வேண்டியது இருக்கும் தாத்தா” என்றான் பாண்டி. “உனக்கு யார்ரா பாண்டினு பேர் வெச்சா” என்றவுடன் ஒரு பேத்தி “பாட்டி தான் இவனுக்கு பேர் வச்சாங்கலாமா தாத்தா” என்று சொன்னாள். உடனே ஒன்பதாம் வகுப்பு பேரன் குறுக்கிட்டு, “ஏந்தாத்தா, ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா மூளை இருக்குது?” என்று கேட்டவுடன்”எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து பார்த்து செயல்படுவதற்குதான்டா “ என்று கூறினார். உடனே பாண்டி , “ஏந்தாத்தா உங்களுக்கும் தனியா தானே மூளை இருக்கு. நீங்க ஏன் சிந்தித்து பாக்காம, உங்க தாத்தா, பாட்டி இல்ல வேற யாராச்சும் ஊருக்குள்ள இருக்குறவங்க சொல்றத கேட்டுட்டு, அதையே எங்ககிட்ட கதையா புருடா விடுறிங்களே” என்றான். “சரி . உங்களுக்கு சந்தேகம்னா உங்க பாட்டி கிட்டவே இந்த கதையப் பத்தி அப்படித்தானான்னு கேளுங்கப்பா “ என்று சொல்லும் போதுபாட்டியே வந்து, “இந்த தாத்தா சொல்றதையெல்லாம் அப்படியே நம்பாதீங்க . நீங்க எல்லாரும் எதா இருந்தாலும் நல்லா சிந்தித்துப் பார்த்து செயல்படுங்க”என்றாள். பாட்டினா பாட்டி தான். எங்க அறிவியல் ஆசிரியர் சொல்ற மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் நீங்க உங்க மூளையை போட்டு கசக்கி , மற்றவர்களுடன் விவாதித்து எது சரி, எது தவறு என்று தெரிந்து செயல்படுங்கள் என்று அடிக்கடி சொல்லுவார். தாத்தாவைத் தவிர அனைத்து பேரக் குழந்தைகளும் பாண்டி சொன்னதை ஆமோதித்தனர்.