சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய தண்டபாணி என்பவர் ஆட்களை அழைத்தார். ஐஸ் ஹவுஸில் வசிக்கும் தொழிலாளர்கள் அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித் குமார், யுவராஜ், அஜித் குமார், ஸ்ரீநாத் என்ற ஐந்து நபர்களை இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தண்டபாணி அழைத்துச் சென்றார்.
கழிவுநீர்த் தொட்டிக்குள் ரஞ்சித் குமார் உள்ளிட்ட இருவர் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேலே நின்றிருந்த அருண்குமார் அவர்களைக் கைகொடுத்து மேலே தூக்கியுள்ளார். இதில் அவரது சகோதரர் ரஞ்சித் குமார் மயக்கமடைந்ததால் அருண் குமார் அவரைக் காப்பாற்றுவதற்கு கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி மேலே தூக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் விஷவாயு தாக்கியதால் அருண்குமார் உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அருண்குமாரை மீட்ட தொழிலாளர்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அருண்குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாக உயிரிழந்த அருண்குமாரின் சகோதரர் ரஞ்சித் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமார் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.