மன்னார்குடி, ஜூலை 30- சாதனை நோக்கத்தில் அவசர வேகத்தில் ரயில்வே பாதைகள் மின்மயமாக்குவது தேவையில்லை. இதில் நிதானம் வேண்டும் இத்திட்டத்தில் மிகப்பெரும் மூலதனத்தை முடக்குவது மற்ற ரயில் வளர்ச்சி திட்டங்க ளை பாதிக்கும் என டிஆர்இயு நிர்வாகி டி.மனோகரன் ரயில்வே துறையை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி டிஆர்இயு உதவி பொதுச்செய லாளர் டி.மனோகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: வரும் 2022 ஆண்டிற்குள் 61680 கி.மீ தூர அகலப் பாதைகளை முற்றிலும் மின்மய மாக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த பாதைகளில் டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றி இயக்க இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் என்ஜின் மாற்றப்பட்டது. அனைத்தையும் மாற்ற இன்னும் பத்து ஆண்டு தேவை.
பலன் தருமா?
2015 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்க ஜெனரல் மோட்டார் நிறுவனம் டீசல் என்ஜின்க ளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் அது வழங்க இருக்கும் 900 டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்ற ரூ.2250 கோடியும், புழக்கத்தில் உள்ள 5868 டீசல் என்ஜின்களில் குறைந்தது ஐயாயிரத்தை மாற்ற ரூ.12250 கோடியும் தேவைப்படுகிறது. 2018-22 நிதியாண்டுகள் மின்மயத் திட்டங்கள் ரூ.30000 கோடியில் திட்ட மிடப்பட்டு இருக்கிறது. மின்மயத்திற்கு ஏற்ப டீசல் பராமரிப்புப் பணிமனைகளின் கட்டமைப்பு மாற்றத்திற்கு சுமார் ரூ.1000 கோடி தேவையும் இருக்கிறது. மின்மயப் பாதைகளில் மின்சார என்ஜின்கள் இயக்க வேண்டும் என்பதற்காக வரும் மூன்று நிதியாண்டுகளுக்குள் 2778 மின்சார என்ஜின்கள் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கு ரூ.30000 கோடி தேவைப்படும். மின்மய மாக்கலுக்காக ரயில்வே அமைச்சகம் செல விடுவதும் செலவிட இருப்பதும் மொத்தம் ரூ. 75 ஆயிரம் கோடிக்கு மேல். இது பலன் தருமா என்பது இப்போது கேள்விக்குறி யாகி இருக்கிறது.
எரிபொருள் செலவு மிச்சமாகவில்லை
2017-18 நிதியாண்டு மின்மயமான தூரம் 4087 கி.மீ, என்ஜின்களுக்கான டீசல் செலவு ரூ.17959.22 கோடி. என்ஜின்களுக்கான மின்சார செலவு ரூ.9990.11 கோடி; 2018-19 நிதியாண்டு மின்மயமான தூரம் 5276 கி.மீ. என்ஜின்களுக்கான டீசல் செலவு ரூ.20551.22 கோடி. என்ஜின்களுக்கான மின்சார செலவு ரூ.10137.96 கோடி .நடப்பு நிதியாண்டு 2019-20 மின்மயத்திற்கு திட்டமிடப்பட்ட தூரம் 7000 கி.மீ. என்ஜின்கள் டீசல் செலவிற்கு நிதி ஒதுக்கீடு, ரூ.21890.37 கோடி, என்ஜின்கள் மின்சார செலவிற்கு நிதி ஒதுக்கீடு ரூ.11066.69 கோடி.
சாத்தியமில்லை
இந்த புள்ளி விவரங்கள் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 9363 கி.மீ தூரம் மின்மயத்திற்கு ஏற்ப எரிபொருள் செலவில் மிச்சம் ஏற்படவில்லை. டீசல் மற்றும் மின்சார என்ஜின்களின் எரிபொருள் செலவுகள் கூடி வருகிறது. நடப்பு 2019-20 நிதியாண்டு என்ஜின்கள் எரிபொரு ளுக்கான நிதி ஒதுக்கீடு இதற்கு ஏற்பவே திட்டமிடப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. கடந்த நிதியாண்டுகளில் அகலப்பாதை யில் ஒரு நாளைக்கு ஒரு என்ஜினை உபயோகப் படுத்தும் தூரம் பயணிகள் பிரிவில் டீசல் என்ஜின்கள் உபயோகம் 5 கி.மீ குறைந்தும் மின்சார என்ஜின்கள் உபயோ கம் 10 கி.மீ அதிகரித்தும், சரக்கு ரயில் பிரிவில் டீசல் என்ஜின்கள் உபயோகம் 10 கி.மீ குறைந்தும் மின்சார என்ஜின்கள் உபயோகம் 4 கி.மீ அதிகரித்தும் உள்ளது. கூடுதல் என்ஜின் உபயோகங்கள் இல்லை. கூடுதல் எரிபொருள் தேவை இல்லை. நூறு சதவீதம் ரயில்வே மின்மயத்தால் ஆண்டுக்கு ரூ.13500 கோடி எரிபொருள் சிக்கனம் என அரசு கூறுவது சாத்தியமில்லை என புலப்படுகிறது.
வெளி மூலதனம்
நடப்பு 2019-20 நிதியாண்டில் 7000 கி.மீ தூரம் மின்மயமாக்க திட்டம் உள்ளது. இதன் நிதித் தேவை ரூ.6960 கோடி. இதற்கு பட்ஜெட் ஆதரவு நிதியாக அரசு வழங்கி இருப்பது ரூ. ஒரு கோடி மட்டுமே. மீதி வெளி மூலதனம். இதனால் அடுத்து வரும் இரண்டு நிதியாண்டுகளில் 21000 கி.மீ மின்மயமாக்கப்பட இருப்பதும் வெளிமூல தனத்தில் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் திட்ட முதலீட்டுக்கான வட்டிச் சுமையும் கூடும். இந்திய ரயில்வே பாதைகள் முற்றிலும் மின்மயமானது என்பது சாதனையாக மட்டுமே தோற்றமளிக்கும். மிகப்பெரும் மூலதனத்தை மின்மயத்தில் முடக்குவது மற்ற ரயில் வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும். இத்திட்டம் அவசரத் தேவையும் அல்ல. மின்மயத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு டி.மனோகரன் தெரிவித்துள்ளார்.