tamilnadu

img

கிழிந்த தார்பாய்களே குடிசை மேற்கூரை, ஒற்றையடிப்பாதையே சாலை

சிறந்த கிராமமாக தேர்வான மொழுகம்பூண்டியின் அவலம் மக்கள் கொந்தளிப்பு - ஆட்சியரை முற்றுகை

திருவண்ணாமலை,டிச.17- அடிப்படை வசதிகளே செய்துகொடுக்கப்படாத கிராமத்தை மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்பட்ட  ‘சிறந்த கிராமமாக’ தேர்வு செய்த கொடுமை தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மொழுகம்பூண்டி கிராமமக்கள்  மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர்.  மத்திய அரசின்‘மிஷன் அந்தியோதயா’ திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை மாவட்டம், மொழுகம்பூண்டி கிராமம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியானது. சாலை பராமரிப்பு, குடிநீர் மற்றும் கழிப்பிடம், குடியிருப்பு, மேம்பாட்டு வசதி போன்றவற்றை அடிப்படை யாகக் கொண்டு இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள பாம்பானியா கிராமப்பஞ்சாயத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இந்திய நாட்டின் சிறந்த கிராமமாக தேர்வு செய்திருக்கும் அந்த தகவல் கிடைத்ததும் மொழுகம்பூண்டி கிராமத்தை நேரில் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள மொழுகம்பூண்டி கிராமத்தில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்லும் சாலை, பராமரிப்பு இல்லாமல் சேறும் சகதியும் நிறைந்த ஒற்றையடி பாதையாகவே உள்ளது. சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம்  என எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் கிடையாது.  பொதுக்கழிப்பறை வசதி இல்லாமல் திறந்தவெளியையே பலரும்  பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. தனிநபர் கழிப்பறை வசதி கூட  அங்குமிங்குமாக ஒன்றிரண்டு தான் உள்ளது.

இந்த கிராம மக்கள் வெளியூர் செல்லவும், தினசரி பணிகளுக்குச் சென்று வரவும் காலை 8 மணிக்கு ஒரே ஒரு நகரப் பேருந்துதான் இயக்கப்படுகிறது. அதோடு சரி, அன்றைய தினம் முழுவதும் போக்குவரத்து வசதி ஏதும் கிடையாது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல், மருத்துவமனைக்கு, நகர வேலைகளுக்கு என அவசரத் தேவைக்கு என்றாலும், நடந்தே செல்லும் நிலைதான் உள்ளது. மொழுகம்பூண்டி கிராமத்தில், பலரின் குடிசைகளுக்கு கிழிந்த தார்ப்பாய்களே கூரைகளாக உள்ளது. இந்த கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி இல்லை. எந்த  அடிப்படை வசதிகளும் கிடையாது. 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரணிக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.  உண்மை நிலவரம் இப்படியிருக்க, மொழுகம்பூண்டி எப்படி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.

ஆட்சியரை முற்றுகை

சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டதாக தமக்கே தெரியாமல் தகவல் வந்ததையடுத்து, திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திடீரென அந்த கிராமத்திற்கு வருகை தந்தார். சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத இந்த கிராமம் எப்படி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது என மக்கள் அவரை முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப்போன ஆட்சியர், பின்னர் சமாளித்துகொண்டு, உங்களுடைய புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  

ஜெ.எஸ். கண்ணன்