தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.65 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது, அதை 8.5 ஆக குறைத்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
வருங்கால வைப்பு நிதிக்கு இந்த நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து அறங்காவலர் வாரியம் இன்று ஆலோசனை நடத்தியது.
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பி.எப். கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த வட்டி விகித மாற்றத்திற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியதும் நடைமுறைக்கு வரும். வட்டி குறைப்பால் பிஎப் கணக்கு வைத்துள்ள 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு வருவாய் குறைந்துள்ளதால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.