புதுதில்லி, மார்ச் 31-
கோவிட் 19 பாதிப்புகளை எதிர்கொள்ள கேரள அரசு மேற்கொண்ட முன்மாதிரியை பின்பற்றி மக்களுக்கு உதவும் தொகுப்பு திட்டங்களை மற்ற மாநிலங்களும் அறிவித்துள்ளன. ஆனால் பாஜக ஆளும் மத்தியபிரதேசமும், கர்நாடகமும் இதுவரை அத்தகைய திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் மவுனமாக உள்ளன.
நாட்டின் மூன்று வாரகால அடைப்பு குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே ‘யாரும் பசித்திருக்கும் நிலை வராது’ என்று முதலில் அதற்கான திட்டத் தொகுப்பை (பேக்கேஜ்) அறிவித்தது கேரள மாநிலமாகும். அடைப்பினால் ஏற்படும் தாக்கத்தை மத்திய அரசோ அல்லது பிற மாநிலங்களோ தீவிரமாக உணரும் முன்பே கேரளத்தின் அறிவிப்புகள் வெளியாகின. அதையொட்டி தில்லியும் தெலுங்கானாவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புகலிடம் அளித்தன. மற்ற மாநிலங்களும் கேரளத்தை பின்பற்றின.
· தமிழ்நாடு ரூ.3280 கோடிக்கான திட்டத் தொகுப்பை உருவாக்கியது. அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய், இலவச அரிசியும் பொருட்களும் அறிவிக்கப்பட்டன. முறைசாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, அம்மா உணவகங்கள் மூலம் உணவும் வழங்கப்படுகிறது.
♦ பஞ்சாபில் பதிவு செய்த அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் ரூ.3,000. தினக்கூலிகளுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
♦ தில்லியில் இரவு தங்குமிடங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற இடங்க ளில் நான்கு லட்சம் பேருக்கு தங்கும் வசதிகளும் இலவச உணவும் கிடைத்து வருகிறது.
♦ ஒடிசாவில் கோவிட்-19 சிகிச்சைக்காக 2 மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன. மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் நான்கு மாத சம்பளம் முன்னதாக வழங்கப்படுகிறது.
♦ உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1,000. ஏழைகளுக்கு ஒரு மாத இலவச ரேசன். விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்க ளுக்கு ஏப்ரல். மே மாதங்களுக்கான சமூகநல ஓய்வூதியம் முன்னதாக வழங்கப்படுகிறது.
♦ குஜராத்தில் குடும்ப அட்டை உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 3.5 கிலோ கோதுமை, 1.5 கிலோ அரிசி, பயறு வகைகள் ஒவ்வொரு கிலோ, எண்ணெய், உப்பு, சர்க்கரை கிடைக்கும்
♦ தெலுங்கானாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.500 மற்றும் 12 கிலோ அரிசி மற்றும் அன்னபூர்ணா உணவகம் மூலம் இலவச உணவு அறிவிக்கப்பட்டுள்ளது.
♦ மகாராஷ்டிராவில் பதிவு செய்த 12 லட்சம் தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
♦ ராஜஸ்தானில் ரூ.2,000 கோடிக்கான தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 78 லட்சம் பேருக்கு இரண்டு மாத சமூகநல ஓய்வூதியம் வழங்கப்படும். 36 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1000 நிதி உதவி கிடைக்கும்.
♦ அரியானாவில் ஏப்ரல் மாத ரேசன் இலவசமாக கிடைக்கும். முதலமைச்சர் பரிவார் சம்யுத்தி யோஜனாவின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு முதல் கட்டமாக ரூ.4,000 உதவி கிடைக்கும்.
♦ ஆந்திரப்பிரதேசத்தில் மாணவர்க ளுக்கான உணவு வீடுகளில் ஒப்படைக்கப்படும். 2.5 லட்சம் தன்னார்வ தொண்டர் படை உருவாக்கப்பட்டுள்ளது.
♦ பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் கர்நாடகத்திலும் மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.