பினராயி விஜயன் அதிரடி
மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
புதுதில்லி,டிச.12- முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதாகவும், இலங்கைத் தமிழர்களை புறக்கணிப்பதாகவும் இந்திய நாட்டை பிளவுபடுத்தக்கூடியது என்றும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவை யிலும் புதனன்று இரவு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புதனன்று தாக்கல் செய்து பேசினார். அவர் கூறுகையில், இந்த மசோதா முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கும். சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க அரசு விரும்பவில்லை என்றார். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவின்படி மாநிலங்களவை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
வாக்கெடுப்பு
மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, மூத்த தலைவர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர். அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினர். விவாதத்துக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதன்பின்னர் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அவை யனைத்தும் தோல்வியடைந்தன. இந்த மசோதாவை தேர்வுக்குழு வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 124 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 99 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து புதனன்று இரவு 8.15 மணியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது . மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. பாஜக, ஐக்கிய ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம், அதிமுக, பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதர வாக வாக்களித்தனர். சிவசேனா கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 9 அன்று நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் கையெழுத்திட்ட பின்னர் சட்டமாகி அரசிதழில் வெளியிடப்படும்.
பினராயி விஜயன் அதிரடி
திருவனந்தபுரம், டிச.12- மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான எந்த சட்டத்தையும் கேரள அரசு அமல்படுத்தாது எனவும் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் வியாழனன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் இதுகுறித்து கூறியதாவது: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், இந்தியர்களுக்கு அரசமைப்பு சாசனம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. இந்த கறுப்பு சட்டத்திற்கு எதிராக மாநில அரசு அனைத்து வகையிலும் கேள்வி எழுப்பும். மதச்சார்பின்மைதான் அரசமைப்பு சாச னத்தின் அடிப்படை என உச்சநீதிமன்றம் பல முறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சட்டத் தின் மூலம் மத்திய அரசு உருவாக்குவது மதத்தின் அடிப்படையில் மட்டுமேயான வேறுபாட்டையாகும். இந்தியப் பிரிவினை யின்போது எங்களுக்கு மத அடிப்படை யிலான பாகிஸ்தான் வேண்டாம்; மதச்சார் பற்ற நாடான இந்தியாவில் வாழ்வதைத்தான் விரும்புகிறோம் என்று கூறி இந்தியாவுக்கு வந்த லட்சோபலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடாகும் இந்தியா. முஸ்லீம் சகோதரர்கள் மதச்சார்பின்மையைத்தான் அங்கீகிரித்திருந்தனர். மதச்சார்பின்மை தான் நமது வலிமை. மதம் சார்ந்த பாகிஸ் தானைப்போல் இந்தியாவை மாற்றவும், அங்கு நடப்பதுபோல் இங்கு நடக்க வேண்டும் என்கிற பழமைவாத அரசிய லைத்தான் ஆர்எஸ்எஸ் முன்வைக்கிறது.
இந்தியாவின் பலம் எது?
வேறுபட்ட சாதி, மத, இன அடிப்படை யிலான மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு இந்தியா என்பதுதான் சர்வதேச அளவில் இந்தியாவின் பலம். அதை தகர்த்து நாட்டின் பெருமையை சீர்குலைப்பது குடிமக்கள் திருத்த சட்டம். இது உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தும் நட வடிக்கையாகும். கேரளத்தில் மத அடிப் படையிலான எந்த ஒரு பாகுபாட்டையும் அனுமதிக்க முடியாது. அனைத்து மதத் தவருக்கும், எந்த மதத்தையும் சாராதவருக்கும் இந்தியர் என்கிற வகை யில் வாழ்வதற்கான சுதந்திரமும், உரிமை யும் அனைவருக்கும் வழங்கப்படும். இது அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையிலான தாகும். கேரள அரசு கடைப்பிடிக்கும் கொள்கை இதுதான். சாவர்க்கர் துவக்கி வைத்து கோல்வால்கர் மூலமாக அவரது சிந்தனையின் ஊடாக வளர்த்தெடுக்கப் பட்டது. இந்து ராஷ்டிரா என்கிற நிகழ்ச்சி நிரல். நமது அரசமைப்பு சாசனம் அனைத்து இந்தியருக்குமான குடியுரிமையை உறுதி செய்கிறது. நமது அரசமைப்பு சாசனம் விடுதலைப் போராட்டத்தின் மூலமாக எழுந்த பல்வேறு சிந்தனைகளையும் போராட்டங்களையும் கிரகித்துக்கொண்ட முற்போக்கு அடிப்படையிலான ஒன்றாகும். சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பாலினம் போன்றவற்றால் வேறுபாடுகள் இல்லாமல் இந்தியர்கள் அனைவருக்கும் உறுதி அளிக்கப்பட்டதாகும் இந்தியக் குடியுரிமை. அதற்கு எதிரான இந்த திருத்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்காது. நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் இத்தகையை முயற்சிகளை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். நடந்து வரும் போராட்டங்கள் அதையே நமக்கு உணர்த்து கின்றன. கேரளத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். சுருக்கமாக கூறி னால் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான எந்த ஒரு சட்டத்திற்கும் கேரளத்தில் இடமில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
டிச. 19- கண்டனம் முழங்குக!
இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்
புதுதில்லி, டிச. 12- மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு எதிராகவும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் நாடு முழுதும் வரும் டிசம்பர் 19 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரித்து, கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவை நிறைவேற்றி இருக்கின்றன. இந்தச் சட்டமுன்வடிவு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறியிருக்கிறது என்றும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்றும் கருதுகிறோம். மதச்சார்பின்மைக்கு நேர் மாறான முறையில் தனிநபரின் மத நம்பிக்கையுடன் குடியுரிமையை இணைத்திடும் இந்தச் சட்டமுன்வடிவினை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் ஆபத்தான முறையில் கேடு பயக்கும் இந்தச் சட்டமுன்வடிவானது, நாட்டில் மதவெறி அடிப்படையில் மக்களை மேலும் பிளவுபடுத்திடுவதைக் குறியாகக்கொண்டதாகும்.
நாடு முழுவதற்கும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை விரிவாக்கப் படும் என்று மோடி-ஷா பாஜக அரசாங்கம் பிரகடனம் செய்திருப்பதுடன், இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பது என்பது, தற்போதைய இந்தியக் குடியரசின் அடித்தளமாக இருக்கக்கூடிய, மதச்சார்பற்ற ஜனநாயகத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சித்தாந்தமான “இந்துத்துவா ராஷ்ட்ரம்”-ஆக, மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். 2019 டிசம்பர் 19 அன்று குடியுரிமை திருத்தச் சட்டமசோதா – தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுமாறு நாடுமுழுதும் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன.
இதே நாளன்றுதான், 1927 டிசம்பர் 19 அன்று, விடுதலைப் போராட்டத்திற்காக இந்திய மக்களைத் தட்டி எழுப்பி அறைகூவல் விடுத்த சர்பிரோசி கி தமன்னா (புரட்சிக்கான வேட்கை எம் இதயத்தில்) என்னும் எழுச்சிக் கவிதையை எழுதிய ராம் பிரசாத் பிஸ்மில், கோரக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அஷ்ஃபாக்குல்லா கான், ஃபைசாபாத் சிறையிலும், ரோஷன் சிங், நைனி சிறையிலும் தூக்கிலிடப்பட்டார்கள். தங்களின் மத வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று போராடிய இத்தகைய ஒற்றுமைதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற வழி வகுத்தது. இன்று, இத்தகைய ஒற்றுமையை, ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்கள் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளார்கள். (ந.நி.)