tamilnadu

img

இந்தி திணிப்பு : போராட்டம் வெடிக்கிறது

புதுதில்லி/சென்னை, செப். 16- இந்தியாவின் ஒற்றை தேசிய மொழி இந்தியே என்றும், இந்தியை இந்தியாவின் அடையாளம் என்றும் கூறி இந்தித் திணிப்பை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ள மத்திய பாஜக அரசின் அராஜக முயற்சிகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று தமிழகத்தில் செப்டம்பர் 18 புதனன்று, இந்தி திணிப்பிற்கு எதிராக பிரதமருக்கு தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தை நடத்துமாறு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக இதுதொடர்பாக வாலிபர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு சார்பில் அதன் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ், பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய தேசத்தின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு இந்தித் திணிப்பை மேற்கொண்டுள்ளது.  நாடு முழுவதும் மோடி அரசாங்கத்தின் நாசகர பொருளாதார கொள்கைகளின் விளைவாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதனால் எழுந்துள்ள மக்களின் கோபத்தையும் கொந்தளிப்பையும் திசைதிருப்பும் நோக்கத்துடன் இந்தித் திணிப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளது.  ஒற்றை தேசிய மொழியாக இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக வலுவானப் போராட்டங்களை நடத்து மாறு வாலிபர் சங்க மத்திய நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது. மாநில மொழிகளில் பிரதமருக்கு கடிதம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இவ்வியக்கத்தை நடத்துமாறு அறைகூவல் விடுக்கிறது” என்று கூறியுள்ளனர்.

திமுக அறிவிப்பு

சென்னையில் திங்களன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமுஎகச

தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்க டேசன் எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள செய்தி யில், “பன்மொழி பேசும் நாட்டில் ஒற்றை மொழியை ஏற்கச் சொல்வது சர்வாதிகாரப் போக்கு, மக்களாட்சி மாண்பிற்கு எதிரானது. இந்தியா பல இனங்கள் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. இந்திய மக்கள் இந்திய மக்களுக்காக உருவாக்கிக் கொண்ட அரசமைப்புச் சட்டம் இந்தியர் அனைவரையும் அனைத்து நிலையிலும் சமமாக வைத்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய மக்கள் பேசும் இன்னும் பல மொழிகள் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மொழிகளையும் சமமாக அரசு நடத்த வேண்டும். ஒற்றை மொழி என்பது ஏனைய இந்திய மொழிகளை வளரவிடாமல் செய்யும் நடவடிக்கை. அறிவியல் வளர்ச்சியின் பயனாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எந்த மொழியில் இருந்தும் எத்தனை மொழிக்கு வேண்டுமானாலும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ள இந்தக் காலத்தில் ஒற்றை மொழியை நாடு முழுக்க இருக்கும் அனைத்து மக்களும் பேச வேண்டும் என்பது இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல். அத்தகைய எந்த முயற்சியையும் தமுஎகச தன் முழு சக்தியுடன் எதிர்க்கும்” என்று கூறியுள்ளனர்.