tamilnadu

img

ஐன்ஸ்டீன், ரோமன் ரோலந்து எதிர்ப்பு - என்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 4  -     ... நேற்றைய தொடர்ச்சி...

1929ஆம் ஆண்டு தொடங்கிய மீரட் சதிவழக்கு விசாரணை நான்காண்டு காலம் நடைபெற்று 1932 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவுற்றது. அதன்பின் தீர்ப்பினை எழுத நீதிபதி ஆர்.எல்.யார்க் என்பவர் ஐந்து மாதங்கள் எடுத்துக் கொண்டார். 1933 ஜனவரி 16ஆம் தேதி அவர் தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணை மொத்தத்தில் நான்காண்டுகள் எடுத்துக் கொண்டது. தீர்ப்பில் கிஷோரிலால் கோஷ், சிவநாத் பானர்ஜி, விஸ்வநாத் முகர்ஜி ஆகிய மூவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். முசாபர் அமகதுவிற்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது. காட்டே, பிலிப் ஸ்பிராட், ஜோக்லேகர், நீம்ப்கர், டாங்கே ஆகியோருக்கு 12 ஆண்டுகால கடுங்காவல், பென் பிராட்லி, மிராஜ்கர் சௌகத் உஸ்மானி, அப்துல்மஜீத் ஆகியோருக்கு 10 ஆண்டு கால கடுங்காவல். சோகன் சிங் ஜோஷ், தரணி கோஷ்வாமி, அயோத்யா பிரசாத் ஆகியோருக்கு ஏழு ஆண்டு கால தண்டனை. ஜி. அதிகாரி, பி.சி.ஜோஷி, எம்.ஜி.தேசாய், கோபன் சக்ரவர்த்தி, ஹட்சின்சன்  ஆகியோருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை. ராதாராமன் மித்ரா, கோபால் பாசக், கேதார்நாத் சைகால் மற்றும் சம்சுல் ஹூதா ஆகியோருக்கு நான்காண்டு கடுங்காவல். ஆல்வே காஸ்லே, கௌரி சங்கர், கதம் ஆகியோருக்கு மூன்று ஆண்டு கால தண்டனை. 

இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. வேதியியல் விஞ்ஞானியான டாக்டர் ஜி.அதிகாரிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஐன்ஸ்டின் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார். தனக்கு பெர்லின் நகரிலேயே நன்கு அறிமுகமானவரும், அற்புதமான விஞ்ஞானியுமான டாக்டர் அதிகாரியை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று கூறி ஐன்ஸ்டின் இங்கிலாந்து பிரதமர் மக்டொனால்டுக்கு பகிரங்க கடிதம் எழுதினார். உலகப் புகழ்பெற்ற அறிஞர் ரோமன் ரோலந்து, இந்தத் தீர்ப்புக்கெதிராக குரல் கொடுத்தார். 
தீர்ப்பை வழங்கிய ஆங்கிலேய நீதிபதி ஆர்.எஸ்,.யார்க், கம்யூனிஸ்ட்டுகள் மீது கொண்ட ஆத்திரத்தினால் அவர்கள் மூன்றாம் வகுப்பு தண்டனைக் கைதிகளாக நடத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டார். இதுவும், மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. எனவே அரசியல் கைதிகளுக்கு விசேஷ ஏற்பாடு செய்ய விதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த விதிகளை ஏற்படுத்தியதில் மீரட் கம்யூனிஸ்ட் கைதிகளுக்குப் பெரும் பங்குண்டு. ஆங்கிலேய அரசாங்கம் இந்தக் கைதிகள் அனைவரையும் இரண்டாம் வகுப்புக் கைதிகளாக நடத்த உத்தரவிட்டது. 

- தொடரும்

 

மீரட் சிறையில் மகாத்மா காந்தி

மீரட் சதி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பொழுது மகாத்மா காந்தி லாகூருக்கு போகும் வழியில் மீரட் கம்யூனிஸ்ட் கைதிகளை சந்தித்துப் பேச மீரட் சிறைக்கு வந்தார். அந்த குறிப்பிட்ட நாளில் மாலை 3 மணிக்கு அவர் சிறைக்குள் வந்தார். கம்யூனிஸ்ட் கைதிகள் அவரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சிறையின் நடுவில் இருந்த திறந்தவெளியில் அவருக்கு ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார். அந்த நிகழ்வை எஸ்.வி.காட்டே விவரிக்கிறார்: 

“அவர் திரும்பி எங்களிடம் வந்தார். நாங்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டோம். சௌரிசௌரா நிகழ்ச்சி பற்றி கேட்டோம். (அங்கு சில போலீசார் கொலையுண்டதால் போராட்டத்தை நிறுத்திவிட்டார் காந்திஜி). பலாத்காரம் நிகழ்ந்துவிட்டது என்று கூறி போராட்டத்தை நிறுத்தி விட்டதைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், “இதோ பாருங்கள். நான் இப்போது ஒரு இயக்கத்தைத் துவக்கவுள்ளேன். எல்லாவிதமான மனிதர்களிடமிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு தேவை.அதற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் இருக்க வேண்டாம் என்பது எனது விருப்பம். உங்கள் மனப்பான்மை என்ன?” என்றார். டாங்கே எழுந்து பதில் சொன்னார், “நல்லது, உங்கள் போராட்டத்தை ஆதரித்து ஒத்துழைக்க எமக்கு எத்தகைய ஆட்சேபமுமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. இயக்கம் நடந்து கொண்டிருக்கையில் அது வேகமடைந்துவரும் சரியான வேளையில் இங்கும் அங்கும் வன்முறை நடந்தது என இயக்கத்தை நிறுத்திவிடலாகாது. நாங்கள் இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதையே விரும்புகின்றோம். அங்கோ இங்கோ ஏதோ நடந்துவிட்டது என்று சொல்லி இயக்கத்தை வாபஸ் பெறக்கூடாது.

காந்திஜி பதில் கூறியது இவ்வாறு இருந்தது: “சிறிது வன்முறை நடந்தால் போராட்டத்தை நிறுத்த மாட்டேன். என நான் வாக்களிக்கின்றேன். இயக்கம் வாபஸ் பெறப்பட மாட்டாது! அதன் பின்னர் “உங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்புத் தருவதற்கு எத்தகைய ஆட்சேபமும் எங்களுக்கு இல்லை” என்றோம்.  அதன்பின் காந்தி அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார்.