சீர்காழி, ஜூன் 6- கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தில் கட்டப்பட்ட ஒரே வருடத்தில் கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனைக் கட்டடம் கடந்த 2019 ஆம் வருடம் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. மருத்துவர் அறை, மருந்து வைக்கும் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்ட இந்த மருத்துவமனைக் கட்டடத்தின் உள்பகுதி தரை தளம் பெரும்பகுதி உடைந்துள்ளது. சுவர்கள் இடிந்து விழுந்தன. பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் சுவர் விரிசல் பகுதியில் தங்க ஏதுவாக உள்ளது. இக்கட்டிடத்தை சீரமைக்க கிராம மக்கள் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கால்நடை மருத்துவமனையை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.