tamilnadu

இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு

மதுரை, ஜூன்  13- மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,”எனது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். எனது தாய் விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார். நான் கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்பொழுது திருமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் என் மீது ஆசிட் வீசி சென்று விட்டார். இதில் எனது உடல் முழுவதும் பாதிக்கப்பட்டது. வலது பக்க முகமும், வலது கண்ணம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் என் மீது ஆசிட் வீசியவர் மீது நடவ டிக்கை எடுக்கவும்,ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட எனது முகம் மற்றும் உடலுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அளிக்கவும், எனது மன உளைச்சல் போன்றவற்றிற்கா கவும்  நஷ்ட ஈடு வழங்க கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இது குறித்து உரிய சாட்சியங்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, மேலும் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனக்கு  இன்னும் நஷ்ட ஈடு எதுவும் வழங்கப்படவில்லை. எனவே அறுவை சிகிச்சை மற்றும் மன உளைச்சல் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி, ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப் பட்டது. இதையடுத்து, ஆசிட் வீசியதில் பாதிக்கப்பட்ட பெண்ணு க்கு 5 லட்ச ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு இழப்பீடாக வழங்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.