தூத்துக்குடி துறைமுக ஆணையம் மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என அறிவித்துவிட்டும் இந்தி அதிகாரி பதவிக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்துள்ளதை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தூத்துக்குடி துறைமுக ஆணையம் மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என அறிவித்துவிட்டு இந்தி அதிகாரி பதவிக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்திருக்கிறது.
தீ அணைப்பு அதிகாரிக்கு கூட ஆள் இல்லையாம். ஆனால் இந்திக்கு ஆள் இருக்கிறதாம்.
தீ அணைப்பை விட முக்கிய இந்தி திணிப்பு.
இந்திக்கு மட்டும் எப்படி ஆள் கிடைக்கிறது?
மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என கைவிரிக்கும் போது...
முதல் நிலை அதிகாரிகள் நியமனத் தேர்வுகளில் -
சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கானது - ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.
இதோ இன்னொரு நியமன தேர்வு அறிவிப்பு.
இந்தி அதிகாரி மற்றும் முதுநிலை உதவி செயலாளர் பதவிக்கு ஆன்லைன் தேர்வில் 23 பேர் தேர்ச்சி பெற்று அவர்களில் இருந்து 6 பேர் இறுதித் தேர்வு பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தேர்வு பட்டியலிலேயே இன்னொரு அதிர்ச்சி உள்ளது. தீ அணைப்பு மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு ஆன்லைன் தேர்வில் இரண்டு பேர் தேர்வு பெற்று அவர்களும் இறுதி தேர்வில் தகுதி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன மர்மம்?
தீ அணைப்பை விட முக்கியம் இந்தி திணிப்பு!
இது தான் ஒன்றிய அரசின் நாசகர மொழிக்கொள்கை." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.