உதயசங்கர்
குள்ளநரி பதுங்கி இருந்தது.
முட்டைகளை அடைகாத்த மயிலுக்குப் பசி.
எழுந்து மெல்ல சுற்றிலும் பார்த்தது.
யாருமில்லை.
யாருமில்லையா?
குள்ளநரி பதுங்கி இருந்தது மயிலுக்குத் தெரியவில்லை.
சற்று தூரத்தில் ஒரு வெட்டுக்கிளி துள்ளிக் கொண்டிருந்தது.
மயில் பத்து அடி நடந்தது.
அதுதான் நேரம் என்று குள்ளநரி பாய்ந்தது.
புதரில் இருந்த முட்டைகளில் ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடியது.
அதைப் பார்த்த மயில் கோபத்துடன் குள்ளநரியை விரட்டியது.
குள்ளநரி வெகுதூரம் போய் நின்றது.
வாயில் கவ்வி இருந்த முட்டையைக் கீழே போட்டது.
முட்டைக்குள் இருக்கும் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் ருசியாக இருக்கும்.
குள்ளநரி நாக்கைச் சப்புக் கொட்டியது.
கடக் முடக்.. கடக் முடக்..
முட்டை ஓடு மெல்ல உடைந்தது.
குள்ளநரி ஆவலுடன் பார்த்தது.
அட!
உடைந்த முட்டையில் இருந்து ஒரு மயில்க்குஞ்சு
டபக் என்று குதித்தது.
மயில் குஞ்சைப் பார்த்ததும் குள்ளநரி திடுக்கிட்டது.
யார் நீ?
என்று கேட்டது குள்ளநரி.
முட்டாளே..யார் நீ?
என்று திருப்பிக் கேட்டது மயில் குஞ்சு.
மயில் குஞ்சின் தைரியத்தைப் பார்த்த குள்ளநரி பயந்து விட்டது.
பின்னால் சென்று பதுங்கியது.
மயில் குஞ்சு கம்பீரமாக நடந்தது.
அம்மாவைத் தேடி.
கியாவ் கியாவ்
அம்மா நீங்க எங்கே இருக்கீங்க?
என்று மழலைக்குரலில் அழைத்தது.
தூரத்தில் அம்மாவின் குரல் கேட்டது.
அதைக் கேட்ட குள்ளநரி ஓடியே போய் விட்டது.