கரூர், ஜூன் 2-கரூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது மக்கள் நீதிமய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த மாதம் 12-ம் தேதி இரவு பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. அன்று தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என பேசினார். அவரது பேச்சுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் அவர் தனது பேச்சுக்கு மறுப்பும் தெரிவிக்காமல் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பரப்புரையின் போது, சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள் என்று தெரிவித்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது கடந்த மே மாதம் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். மேலும் அவர் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2-ல் 15 நாட்களுக்குள் ஆஜராகி ஜாமீன் பெறலாம் எனக் கூறியதை தொடர்ந்து சனிக்கிழமை சென்னையில் இருந்து திருச்சி வந்த கமல்ஹாசன் அங்கிருந்து கரூர் வந்து அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு பிற்பகல் 2.40 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2ல் மாஜிஸ்திரேட் விஜய் கார்த்திக் முன் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார். தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து கமல்ஹாசன் வெளியே வந்த போது, நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி கேட்டனர். எனினும் அவர் பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.