அகமதாபாத் விமான விபத்து ஏஏஐபி விசாரணையை மாற்ற வேண்டாம்!
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்
புதுதில்லி, ஜூன் 16 - அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, ஏஏஐபி எனப்படும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (Aircraft Accident Investigation Bureau) நடத்தும் விசாரணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் கூடாது என்று ஒன்றிய பாஜக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அகமதாபாத்தில் நடந்த ‘ஏர் இந்தியா- 171’ விமான விபத்து தொடர்பாக, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக் கழகம் (International Civil Aviation Organization), வகுத்துள்ள சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி, இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (Aircraft Accident Investigation Bureau) விபத்தைச் சுற்றியுள்ள காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அதன் சுயேச்சையான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தப் பணியை பொறுத்தவரை, விமான விபத்து புலனாய்வுப் பிரிவானது (AAIB), விமானத்தின் “கருப்புப் பெட்டிகள்” மற்றும் பிற அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகள், விமானம் மற்றும் இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் அதன் விசாரணைகளை நடத்தி முடிக்கும். ஆனால், ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சிப் போக்காக, இந்திய அரசு, உள்துறை செயலாளர் தலைமையில் ஓர் “உயர்மட்டக்குழுவை” அமைத்துள்ளது. விபத்துக்கான ‘மூலக் காரணத்தை, ‘கருப்புப் பெட்டிகளை’ அணுகுவதன் மூலம் தீர்மானித்தல் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகொள்வது போன்ற பல குறிக்கோள்களுடன் இது அமைந்துள்ளது. முழுவதும் அதிகாரிகளைக் கொண்ட- ஒரு இணையான உயர் அதிகாரம் கொண்ட அரசாங்க விமான விபத்து விசாரணைக் குழுவை வைத்திருப்பது, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கீழ் அமைந்துள்ள விமான விபத்து புலனாய்வுக் கழகத்தின் (AAIB) விசாரணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். எனவே, ‘ஏர் இந்தியா 171’-இன் விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பான, ஒன்றிய அரசின் உயர்மட்டக்குழு பணி நியமன விதிமுறைகள் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. விபத்து விசாரணையை நிபுணர்களிடம் விட்டுவிடுவது நல்லது. அதற்கு பதிலாக, உயர்மட்டக்குழு, அகமதாபாத் மற்றும் பிற முந்தைய விபத்து விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து, விமான நிலையங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரம் மற்றும் பாதுகாப்பு அளவுருக்களுக்குள் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் வருவதைத் தடுக்க கடுமையான செயல்படுத்தலுக்கான பிணைப்பு விதிகள் மற்றும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். அகமதாபாத்தில், பெரிய மருத்துவமனைகள் மிக அருகில் இருந்த நிலையில், இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)