பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித் தர சிபிஎம் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, ஆக. 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் செய்தியாளரிடம் கூறுகையில், “திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் இராயநல்லூர் கிராமத்தில் சிமெண்ட் பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. பாலத்தின் வழியாக மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தினமும் சென்று வருகின்றனர். பழுதடைந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் பாலம் இருப்பதால், இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழும் நிலையும் இருக்கிறது. இடிந்து விழும் நிலையில் இருக்கும் பாலத்தை, தமிழக அரசு இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது’’ என்றார்.