பசியுடன் அலையும் தெருநாய்கள், கோயில்களில் சுற்றித்திரியும் குரங்குகள்…..யாரையெல்லாம் ஒரு முதலமைச்சர் நினைவுகூர்ந்து அக்கறையுடன் சேர்த்துக்கொள்கிறார், என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முன்னணி நடிகர் மோகன்லால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: மனிதர்கள் வீடுகளுக்குள் ஒதுங்கும்போது பட்டினி கிடக்கும் வளர்ப்பு விலங்குகளை, தெருக்களில் மனிதர்கள் இல்லாதபோது பசியுடன் அலையும் தெரு நாய்களை, சாஸ்தான் கோட்டை கோயிலில் படையல் சோறு இல்லாததால் கடும் பட்டினிக்கு உள்ளாகும் குரங்குகளை…… யாரையெல்லாம் ஒரு முதலமைச்சர் கொள்ளை நோயின் இந்த நாட்களில் நினைவுகூர்ந்து அக்கறையுடன் சேர்த்துக் கொள்கிறார்!.நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். மாபெரும் நாட்டின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி மக்கள் அனைவரையும் பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு பிரதமரின் கீழ், இப்படியொரு முதல்வரின் கீழ் நாம் பாதுகாப்பாக உள்ளோம். ஆனால், நமது பாதுகாப்புக்காக, நமது காவலுக்காக இரவும் பகலும் பணியாற்றும் காவல் படையை, சுகாதார ஊழியர்களை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம்….கூடாது… அவர்களும் நம்மைப்போன்று மனிதர்கள்தான்… அவர்களுக்கும் ஒரு குடும்பம் உண்டு. அவர்களும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் ஆகும் போதுதான் நமது ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்த மகா துயர்துடைப்பு முழுமையடையும்… இந்த போரில் நாம் வென்றேயாக வேண்டும். புத்திசாலித்தனமாகவும், விழிப்புடனும், பிரார்த்தனையுடனும் வீடுகளிலேயே இருந்து கொள்ளுங்கள்…. அனைத்து துயரங்களும் அகன்று புதிய விடியலைக் காண சாளரங்கள் திறக்கட்டும்…. என மோகன்லால் தெரிவித்துள்ளார்.