ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் திறன் கொண்ட வீரர்களை, 2 மாதத்தில் இந்திய விமானப் படை தேர்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 2022-ஆம் ஆண்டில், ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் திறன் கொண்ட 10 வீரர்களை, இந்திய விமானப் படை தேர்வு செய்யும். பின்னர் அதில் இருந்து சிறந்த 3 வீரர்களை, 2 மாதத்துக்குள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், கடந்த ஜூன் 8-ஆம் தேதி, இந்த திட்டத்தை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விமானப்படை துணை தளபதி ஆர்ஜிகே கபூர், விமானப்படை மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், டிஆர்டிஓ தலைவர், எச்.ஏ.எல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், ககன்யான் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்திய விமானப்படை, விண்வெளிக்குச் செல்லும் திறன் கொண்ட 10 வீரர்களை தேர்வு செய்து, அதில் இருந்து சிறந்த 3 வீரர்களை, 2 மாதத்துக்குள் தேர்வு செய்து பயிற்சி வழங்கும். டிஆர்டிஓ, விண்வெளிக்கு செல்லும் குழுவின் பாதுகாப்புக்கு தேவையான கருவிகளை வழங்கும். அதேபோல், இந்திய கடற்படை மனித கேப்ஸ்யூளை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.