(குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியது என்று அரசு சொல்கின்ற ஹர்ஷ் மந்தரின் முழு உரை.
ஃபர்ஸ்ட் போஸ்ட் 2020 மார்ச் 05)
2020 மார்ச் 4 புதன்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஹர்ஷ் மந்தர் ஆற்றிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாசித்தார். இந்திய தெருக்களில் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க வலியுறுத்தி அங்கிருந்த கூட்டத்தை மந்தரின் பேச்சு தூண்டியது என்று அப்போது குற்றம் சாட்டிய மேத்தா, தான் உச்சநீதிமன்றத்தை நம்பவில்லை என்று மந்தர் கூறிய பகுதியையும் மேற்கோள் காட்டினார்.
பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற டெல்லி வன்முறை கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசியதாக, பாஜக தலைவர்களான அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கோரிய மனுதாரர்களில் ஒருவரான சமூக ஆர்வலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஷ் மந்தரின் மனுவை விசாரிக்க 2020 மார்ச் 4 புதன்கிழமையன்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்விடம், நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை மட்டும் விசாரிக்க முடியாது என்றும், இரு தரப்பிலும் பேசப்பட்ட உரைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறினார்.
வன்முறையைத் தூண்டியதாகவும், உச்சநீதிமன்றத்திற்கு எதிராக கூட்டத்தைத் தூண்டி விட்டதாகவும் கூறி, 2019 டிசம்பர் 16 அன்று, ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மந்தர் ஆற்றிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை விசாரணையின் போது துஷார் மேத்தா வாசித்துக் காண்பித்தார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் கருத்துக்களைக் கேட்டு கோபமடைந்திருந்த அந்த அமர்வு, அவருடைய கருத்துக்கள் ஆய்வு செய்யப்படும் வரையிலும், அவரது வேண்டுகோளை, பரிசீலிப்பதற்கு மறுத்துவிட்டது. மந்தரின் பேச்சு குறித்து மார்ச் 6 வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், இறுதியாக தெருக்களில் இருந்தே நீதி பெறப்பட வேண்டும் என்றும் மந்தர் கூறியிருப்பதாக, ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மந்தரின் உரையை மேத்தா மேற்கோள் காட்டினார். "இந்திய மக்களை அழைத்ததாக"வும், "தெருக்களில்தான் உண்மையான நீதி கிடைக்கும்" என்று கூறுவதாகவும் உள்ள மந்தரின் உரை குறித்த வீடியோ துணுக்கை மேற்கோள் காட்டி மேத்தா கூறினார்.
இரு தரப்பிலும் தூண்டி விடப்படும் பேச்சுக்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய மேத்தா "இவர்கள் இந்த மன்றங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது" என்று மந்தர் பேசியதைக் குறிப்பிட்டார். "மந்தர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் வரையிலும், நீதிமன்றம் மந்தரின் வழக்கை விசாரிக்காது" என்று தலைமை நீதிபதி கூறினார்.
ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் அந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உண்மையில் என்னதான் பேசினார்? மந்தரின் முழு உரையின் மொழிபெயர்ப்பு இங்கே தரப்படுகிறது.
"நாம் எதற்காகப் போராடுகிறோம், யாருக்காகப் போராடுகிறோம்? என்ற முழக்கத்தை நான் இன்றைக்கு இங்கே எழுப்புகிறேன். முதலில் நம் நாட்டிற்கானதாகவும், பின்னர் நமது அரசியலமைப்பிற்கானதாகவும், அதற்கும் பின்னர் நேசத்திற்கானதாகவும் இந்த சண்டை இருக்கிறது. இந்த அரசாங்கம் நமது முஸ்லீம்களுக்கு எதிராக மட்டும் தனது போரை அறிவித்திருக்கவில்லை. நாட்டில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எதிரானதாக, இந்த நாடு எப்படி இருக்க வேண்டுமென்று கற்பனை செய்யப்பட்ட விதத்திற்கு எதிரானதாக அந்தப் போர் இருக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தின் போது, இந்தியாவைப் பற்றிய ஒரு கற்பனை இருந்தது. காலனித்துவ ஆட்சி முடிந்த பிறகு, நமது நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை இருந்தது. ஒருவர் பகவானை அல்லது அல்லாவை நம்புபவராக அல்லது எதையுமே நம்பாதவராக இருந்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கற்பனை நம்மிடையே இருந்தது. ஒருவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் அல்லது ஒருவர் எந்த மொழி பேசுகிறார் என்பது முக்கியமல்ல. நீங்கள் பணக்காரராக அல்லது ஏழையாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பரவாயில்லை. சமமான மனிதர்களாகவும், இந்த நாட்டின் சமமான குடிமக்களாகவும் அனைவரும் கருதப்படுவார்கள். இந்த நாட்டின் மீது பிறருக்கு இருப்பதைப் போன்ற உரிமை உங்களுக்கும் இருக்கும் என்ற கற்பனை இருந்தது.
இந்த நாட்டின் மீது கொண்டிருக்கும் தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் நிரூபிக்கும்படி இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்கள் கேட்கப்படுகின்ற இன்றைய தினத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காத, அதற்காக தியாகங்களைச் செய்யாதவர்களால் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இங்கே இருக்கின்ற முஸ்லீம் சகோதர, சகோதரிகள், குழந்தைகள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் இந்தியர்களாக இருக்கிறார்கள். நம்மைப் போன்ற எஞ்சியவர்கள் தற்செயலாக இந்தியர்களாக இருக்கிறோம். நம்மைப் போன்றவர்களுக்கு வேறு வழியில்லை. நமக்கு முன்பாக இந்த நாடு மட்டுமே இருந்தது. ஆனால் முஸ்லீம்களுக்கோ நாட்டைத் தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு இருந்தது. முஸ்லீம்களின் மூதாதையர்கள் தாங்கள் வாழ்வதற்கென்று இந்த நாட்டைத் தேர்ந்தெடுத்தனர்.
இன்றைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னா செய்தது சரி, மகாத்மா காந்தி செய்தது தவறு என்று நிரூபிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பாரதிய ஜனதா கட்சி என்ற தங்களுடைய கட்சியின் பெயரை பாரதிய ஜின்னா கட்சி என்று மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, "முஸ்லீம் பாகிஸ்தான், ஹிந்து ஹிந்துஸ்தான் என்று இரண்டு நாடுகள்" என்று ஜின்னா சாகேப் கூறியிருந்தார்.
நாம் சொல்வது என்னவென்றால், இந்தியா என்பது ஒரே தேசம்: முஸ்லீம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள், ஆதிவாசிகள், தலித்துகள், பணக்காரர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்கும் சம உரிமை உள்ள ஒரே நாடு.
உங்களுடைய தேசிய இனத்தைப் பற்றி உங்களிடம் கேட்கின்ற, உங்களுடைய உரிமைகளை பறிக்கப் போவதாக அச்சுறுத்தும் எவரொருவரும், இந்த நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கும், அரசியலமைப்பின் ஆன்மாவை உருவாக்கியிருக்கின்ற நேசத்தையும், நட்பையும் காப்பாற்றுவதற்காக மாநிலங்கள் முழுவதும் நடந்து வருகின்ற ஓர் இயக்கத்தின் மூலம் எதிர்கொள்ளப்படுகிறார்கள். நமது அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக, நாம் தெருக்களுக்கு வந்துள்ளோம், தொடர்ந்து வீதிகளை ஆக்கிரமிப்போம்.
எவ்வாறாயினும் ந்மது போராட்டத்தை பாராளுமன்றத்தின் மூலம் நாம் வென்றெடுக்க முடியாது. ஏனெனில் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அறிவித்துக் கொள்ளும் அரசியல் கட்சிகளிடம், இந்தப் போராட்டத்தை மேற்கொள்வதற்கான தார்மீக வலிமை இல்லை. இந்த போராட்டத்தை உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் நாம் வென்றெடுக்க முடியாது. என்ஆர்சி, அயோத்தியா சர்ச்சை, காஷ்மீரில் 370ஆவது பிரிவை ரத்து செய்தது தொடர்பான முந்தைய வழக்குகளில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். மனிதநேயம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் தவறியிருக்கிறது. நம்மால் முடிந்தவரை உச்சநீதிமன்றத்தில் கடினமாக முயற்சிப்போம். ஏனென்றால் அது நம்முடைய உச்ச நீதிமன்றம். ஆனாலும் நமக்கான இறுதி முடிவு அல்லது தீர்ப்பு பாராளுமன்றத்தாலோ அல்லது உச்ச நீதிமன்றத்தாலோ வழங்கப்படாது.
நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? இங்கிருக்கும் இளைஞர்கள் - எந்த மாதிரியான நாட்டை உங்கள் குழந்தைகளிடம் விட்டு விட்டுப் போக விரும்புகிறீர்கள்? இந்த முடிவு எங்கே எடுக்கப்படப் போகிறது? ஒருபுறம், தெருக்களில் முடிவெடுக்கலாம். நாம் அனைவரும் தெருக்களில் இருக்கிறோம். இருப்பினும், தெருக்களை விட மிகப்பெரிய இடம் ஒன்று இருக்கிறது. அங்கே இந்த முடிவு எடுக்கப்படும். ஆனால் நமது போராட்டத்திற்கான தீர்வு இந்த வீதிகளை விட மிகப்பெரிய இடத்தில், அதாவது உங்களுடைய இதயங்களில், என்னுடைய இதயத்தில் எடுக்கப்படும்.
வெறுப்புடன் அவர்கள் பதிலளிக்க விரும்புகின்ற போது, நாமும் அவ்வாறே பதிலளித்தால், வெறுப்பு மட்டுமே இங்கே செழிக்கும். நாட்டில் இருளைப் பரப்புகின்ற ஒருவரை நாமும் அவ்வாறே எதிர்கொள்கிறோம் என்றால். இருள் அதிகமாகப் பரவி, அது மிகவும் அடர்த்தியாக வளரும் என்பதே இயற்கை. இருள் இருக்குமென்றால், அதை விளக்கை ஏற்றி மட்டுமே எதிர்கொள்ள முடியும். அதிக இருள் இருந்தால், நமது விளக்குகளை தனித்தனியாக நாம் ஏற்றி வைப்போம். அவ்வாறுதான் இருளைத் தோற்கடிக்க முடியும். அவர்களிடம் உள்ள வெறுப்பிற்கு நம்மிடம் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது, அந்தப் பதில் நேசம்.
அவர்கள் வன்முறையை ஏற்படுத்துவார்கள். அவர்கள் நம்மை வன்முறைக்குத் தூண்டுவார்கள். ஆனால் நாம் ஒருபோதும் வன்முறையில் ஈடுபட கூடாது. வன்முறையைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுவது அவர்களின் சூழ்ச்சி என்பதை தயவுசெய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு சதவிகித வன்முறையுடன் நாம் பதிலளித்தால், அதற்கான பதில் 100 மடங்கு அதிகமாக வன்முறையுடன் இருக்கும். வன்முறை மற்றும் அநீதி குறித்து காந்திஜி நமக்கு என்ன கற்பித்துக் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். அகிம்சையுடன் நாம் போராட வேண்டியது மிக முக்கியமானது. வன்முறை மற்றும் வெறுப்புக்கு உங்களைத் தூண்டுகின்ற எவரும் உங்களுக்கு நண்பராக இருக்க முடியாது.
நான் இப்போது முழக்கமிடுகிறேன் – அரசியலமைப்பு நீடூழி வாழ்க, நேசம் நீடூழி வாழ்க "
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு