tamilnadu

img

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை,பிப்.18- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க சட்டத்திலேயே இடம் இல்லாதபோது, அதை வழங்க முடியும் என்று தவறான தகவலை கொடுத்த அமைச்சர் பாண்டியராஜன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார்.  இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக இரட்டை குடியுரிமை பற்றி வலியுறுத்தி வந்தார். இலங்கை அகதிகளுக்கு இதற்கு முன்பு இந்திய குடியுரிமையே வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

பிறகு, இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கமளித்த பேரவைத் தலைவர் தனபால், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என்றார்.  அமைச்சரின் பதில் மற்றும் பேரவைத் தலைவரின் முடிவு திருப்தியில்லை எனக் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், பேரவை வளாகத்திற்கு வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன், “குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. இரட்டை குடியுரிமை விவகாரத்தில் அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார்” என்றார்.