கோவை, ஆக.12- இலங்கை போதைப் பொருள் கடத்தலாளி அங்கொட லொக்கா உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கைது செய் யப்பட்ட மூவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்தது. இலங்கை போதைப் பொருள் கடத்தலாளி அங்கொட லொக்கா உயிரிழந்தது மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது ஆகியவை தொடர்பாக இரு வழ க்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அங்கொட லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, வழக் கறிஞர் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு சிபி சிஐடி போலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை புதனன்று நடை பெற்றது. இதில், 3 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். வழக்கு தொடர்பாக திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். போலி ஆவணங்களை தயாரித்து பயன்படுத்தியது மற்றும் பணப் பட்டுவாடா உள்ளிட்டவை குறித்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் வாதிக்கப்பட்டது.
சுமார் மூன்று மணி நேரமாக நடந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் புதன்கிழமை பிற்பகல் முதல் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை 3 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதியளிப்பதாக தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகுமார் அனுமதி யளித்தார். இதனையடுத்து, 3 பேரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார் அங்கொட லொக்கா உயிரிழப்பு, போலி ஆவணம் தயாரித்தல் ஆகியவை குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர்.