திருப்பூர், மே 28-பிரான்ஸில் நடைபெறும் ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பேஷன் நகரங்களில் பிரதானமானதாக உள்ளது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரம். அந்நகரில் ஆண்டுக்கு இரண்டு முறை ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெறும். இதில் பாரீஸில் அடுத்தது யார் என்கிற கண்காட்சி சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள், இந்த கண்காட்சியில் பங்கேற்று, வர்த்தக விசாரணைகள் நடத்துகின்றன. நடப்பு ஆண்டுக்கான கண்காட்சி, வரும் செப்டம்பர் 6ந் தேதி துவங்கி 9ந் தேதி வரை, நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல் முறையாக இந்த கண்காட்சியில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) பங்கேற்கிறது. நமது நாட்டு ஆடை ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில், ஆடை ரகங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று, புதிய வர்த்தகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, பிரான்ஸ் நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க, ஏஇபிசி அழைப்பு விடுத்துள்ளது. வரும், 17ந் தேதிக்குள் விண்ணப்பிப்போருக்கு, கண்காட்சிக்கான அரங்க கட்டணத்தில், ரூ.10 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.