கோவை, செப்.12- இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி சமூக பதட்டம் ஏற்படுத்த முயற்சித்தாக கோவையில் விஎச்பி அமைப்பினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் கடந்த 6 ஆம் தேதியன்று விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது வி.எச்.பி அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஎச்பி நிர்வாகிகள் லோகநாதன், அரவிந்த், சிவசாமி என்ற மூன்று பேரை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வியாழனன்று கைது செய்தனர். இவர்கள் மீது கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக, சமூக வலைதளங்களில் இருந்த காணொளி அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகனகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.