உதகை, மே 13-உதகையில் நடைபெறவுள்ள மலர் கண்காட்சி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.உதகையில் மே 17 மதல் 21ம் தேதிவரை 123வது மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. தோட்டக்கலைத்துறை உட்பட பல்வேறு அரசுத்துறைகள் மூலம் பல்வேறு அரங்குகள், சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த அரங்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் 123-வது மலர்க்காட்சியை தொடங்கி வைக்கிறார். இவ்விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் விழாவிற்கான பாதுகாப்பு பணிகள், போக்குரவத்து சீரமைப்பு, சுற்றுலா பயணிகளுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி உட்பட உட்கட்டமைப்பு வசதி கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெ.சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ், தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரசு விடுமுறைநீலகிரி மாவட்டத்தில் மலர்க்கண்காட்சி தொடங்கும் நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் அரசுபாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.