தில்லி வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார் கூட்டம் போராடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23-ஆம் தேதி தில்லியில் அமைதியாக நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது, சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில் அங்கு வந்த கும்பல் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 3 நாட்களாக நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தில்லி வன்முறையில் ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளதாக ஐநாவின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.