tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : கவிஞர் தமிழ்ஒளி நினைவு நாள்....

தமிழ் ஒளி புதுவையில் 1921ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 21ஆம் நாள்பிறந்தார்.மகாகவி பாரதியின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல தளங்களில் திறம்பட இயங்கியவர். 

தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும்சாதிய வேறுபாடுகளையும் சாடி எண்ணற்ற கவிதைகளை எழுதினார். குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டுப் பெற்றார். தமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பின்னர் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார்.

1949ஆம்ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்’ என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவரது கொள்கை.‘ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்’ என்றார். ‘நிலை பெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின ரோஜா’ ஆகிய மூன்று காவியங்களும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தலித் மக்களின் விடுதலை, அவர்களின் முன்னேற்றம், உழைக்கும் மக்களின் உரிமைகள்  ஆகியவற்றை விவரிக்கின்றன. ‘வீராயி’ என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தலித்பெண்ணாகக் காட்டப்படுகிறாள். தமிழ் ஒளியின் ‘மேதினம்’ குறித்த படைப்பில்...“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கிவிண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சிவாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்டபொய்யர் குலம் நடுங்கப் பொங்கிவந்த மேதினமே” என்னும் வரிகள் அர்த்த அடர்த்தி மிக்கவை. 

5 சிறுகதைத் தொகுதிகளை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், தலித்துகள், தொழிலாளர்கள், போராளிகள் எனஅடித்தட்டு மக்களாகவே இருந்தனர். இடதுசாரி இயக்கப் படைப்பாக்கங்களில் சாதியச் சிக்கல்கள் நேரடியாகப் பேசப்படாமல் இருந்த காலத்தில் தமிழ் ஒளிசாதியத்தையும் தலித்துகளின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். ‘தாமரை’ என்னும் இலக்கிய இதழில் ‘வனமலர்’ என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகளை எழுதினார். ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் ஒளி திரைப்படத்துறையில் கால் வைத்தார். ‘உலகம்’ என்னும் திரைப் படத்தில் ஒருபாடலும் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்னும் திரைப்படத்தில் ஒரு பாடலும் எழுதினார். எவரெஸ்ட் மலை உச்சியில் தேசியக்கொடி ஏற்றி சாதனை படைத்தடென்சிங்கைப் பாராட்டிக் கவிதை எழுதினார். நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்த போதும் கவிதை படைத்தார். இவர் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்