தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தல் தமிழகத்தில் எந்தவித வன்முறைச் சம்பவங்களும் இன்றி, முறைகேடுகளும் இன்றி நேர்மையாக, அமைதியாக நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் துவங்கும் போதே தமிழக முதலமைச்சர் 100 விழுக்காடு வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்கள் இந்த கூட்டணியை 100 விழுக்காடு வெற்றிபெற செய்வார்கள் என்பதை கண்கூடாக பார்த்தோம். ஒரு சில இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும் கூட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 99.5 விழுக்காடு வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
அதிமுக புறக்கணிப்பு
2016ஆம் ஆண்டு நடத்த வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அந்த நிர்வாகத்தை அதிமுக சீர்குலைத்து விட்டது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் அதிமுகவை மக்கள் முற்றாக புறக்கணித்துள்ளார்கள்.
பாஜகவுக்கு இடமில்லை
அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை என்னென்னமோ உளறிக் கொண்டிருக்கிறார். அவரையும் தமிழக மக்கள் ஒரு கொட்டு கொட்டி ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுக்கு இடம் கிடையாது என்பதை இந்த தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி.
நேர்மையாக பாடுபடுவோம்
கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். 9 மாதங்களில் இந்த ஆட்சி செய்ய வேண்டியதை செய்துள்ளது, மீதமுள்ள காலங்களில் அனைத்து பணிகளையும் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி மக்களாட்சி மலர்ந்திருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் நேர்மையாக பாடுபடுவோம்.
திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் வேட்பாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.