சென்னை,டிச.1- அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்” என்றார். அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று புவியரசன் கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன கனமழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார். கடந்த 24மணி நேரத்தை பொறுத்தவரையில், 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 செ. மீட்டர் மழையும், கடலூரில் 17 செ. மீட்டர் மழையும், நெல்லையில் 15 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 13 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களை பொறுத்தவரையில், லட்சத் தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் கேட்டுக் கொண்டார்.