tamilnadu

img

புதிய போராட்ட வடிவங்களை உருவாக்கியவர் லட்சுமிநரசிம்மன் நினைவேந்தல் கூட்டத்தில் புகழாரம்

சென்னை, பிப். 16 - அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் புதிய போராட்ட வடிவங்களை  உருவாக்கிய வர் மருத்துவர் லட்சுமிநரசிம்மன் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர். மருத்துவர் என்.லட்சுமிநரசிம்மன் நினைவேந்தல் கூட்டம் ஞாயிறன்று (பிப்.16) சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் (சென்னை), மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர்கள் சங்கம் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. இந்நிகழ்வில் நினைவேந்தல் உரை யாற்றிய தலைவர்கள், “தமிழக மருத்துவர், மாணவர்களின் போராட்ட வரலாற்றை எழுதும்போது, லட்சுமி நரசிம்மனை தவிர்க்க முடியாது. ராமச்சந்திரா மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் போராட்டங்களுக்கு புது வடிவங்களை கொடுத்தவர்” என்றனர். “கடந்தாண்டு அக்டோபர் மாதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் 6 நாள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப்  போராட்டத்தில் மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையோடு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் சேர்த்து லட்சுமி நரசிம்மன் எழுப்பினார். அதனால் அந்தப் போராட்டம் மக்கள் ஆதரவோடு வலுவாக நடைபெற்றது. இதனை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டால் பழிவாங்கல் இருக்காது என்றனர். இதற்கு மாறாக, நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியிட மாறுதல் செய்தனர். இதில் மன உளை ச்சலுக்கு உள்ளான லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் உயிரிழந்தார். எனவே, தமிழக அரசு இதர மருத்துவர்கள் மீதான இடமாறுதல் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்வுக்கு மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் காசி, அமலோற்பநாதன், வெங்கட்ரமணா, இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பத்திரிகை யாளர் சங்கத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்த மன், பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.