tamilnadu

img

திருவண்ணாமலை நகர மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை நகர மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜுன் 16- சாமான்ய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் மீது தீர்வு காண வேண்டுமென திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  கட்சியின் மாநகரச் செயலாளர் எம். பிரகலநாதன் அளித்த அந்த மனுவில், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தில், நாள் ஒன்றுக்கு இருசக்கர வாகனத்திற்கு ரூ.10 வசூலிப்பது என்று மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததை மீறி ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை வசூல் செய்யப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பு மையத்தில் விட்டு செல்லுகின்ற விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லுகின்ற பொதுமக்களிடம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது.  கட்டணம் வசூலிப்பால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் என அனைவரும்  பாதிக்கப்படுகின்றனர். எனவே முறையான கட்டணத்தை வசூல் செய்திடவேண்டும், பொது கழிவறையை சுத்தப்படுத்தி நோய் தொற்றுகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், நகரம் முழுவதும் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணிகளை துரிதமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும், மேலும், போக்குவரத்தை முறைபடுத்துகிறோம் என்ற பெயரில் தெருக்களின் குறுக்கே, இரும்பு தடுப்பை அமைத்து ஆட்டோக்களும், இருசக்கர வாகனமும், பொதுமக்களும், கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தெருக்களின் குறுக்கே உள்ள இரும்பு தடுப்புகளை அகற்றிடவேண்டும்.  திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் பொதுமக்களின் இத்தகைய வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.