சிட்டி யூனியன் வங்கி ரூ.683 கோடி நிகரலாபம்
சென்னை,மே 17-கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் (சியுபி) 2018-19 ஆம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு மற்றும் வருடாந்திர கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.காமகோடி சென்னையில் வெளியிட்டார்.வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 17 விழுக்காடு உயர்ந்து ரூ.71513 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்புத்தொகை (டெபாசிட்) கடந்த ஆண்டை விட 17விழுக்காடு உயர்ந்து ரூ.38448 கோடியாகவும் கடன்கள் (அட்வான்ஸ்)ரூ.33065 ஆகவும் உள்ளது.வங்கியின் நிகரலாபம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 15விழுக்காடு உயர்ந்து ரூ.683 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 9 விழுக்காடு உயர்ந்து ரூ.4282 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் சென்ற ஆண்டை காட்டிலும் 13 விழுக்காடு உயர்ந்து ரூ.1611 கோடியாக உள்ளது என்றார் அவர். வங்கியின் மொத்த லாபம் நான்காவது காலாண்டில் 15 விழுக்காடு அதிகரித்து ரூ.338 கோடியாக உள்ளது. நிகரலாபம் கடந்த காலாண்டைக் காட்டிலும் 15விழுக்காடு அதிகரித்து ரூ.175 கோடியாக உள்ளது.வங்கியின் மொத்தவாரக்கடன் 2.95 விழுக்காடாகவும் நிகர வராக்கடன் 1.81 ஆகவும் உள்ளது.குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும்வசதியை அறிமுகம் செய்துள்ளதாகவும் காமகோடி கூறினார்.கடந்தாண்டு நிறுவப்பட்ட 50 கிளைகளையும் சேர்த்து வங்கிக்கு நாடு முழுவதும் 650 கிளைகள் உள்ளன. 1685 ஏடிஎம் மையங்களையும் கொண்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் வங்கியின் பொதுமேலாளர் வி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுபானத்தை பதுக்கி விற்ற ‘பார்’ ஊழியர்கள் 4 பேர் கைது
காஞ்சிபுரம்,மே 17-காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த பார் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளின் பார்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்த காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை சாலியர் தெருமேட்டு தெரு நெல்லுக்காரதெரு பகுதியில் உள்ள பார் ஊழியர்கள் கிருபானந்தன், நாகராஜ், முருகன், பசுபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.