தமிழக மின் தேவையை எதிர்கொள்ள அனல், புனல், அணு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. மரபுசாரா பசுமை மின் உற்பத்தி என்ற முறையில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியில் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. தமிழக சூரியஒளி மின் உற்பத்தியில் தனியாரை ‘ஊக்குவிக்கும்’ விதமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 648 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதானியின் நிறுவனத்திற்கு தாரைவார்த்தது. 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அதானி தயாரிக்கும் மின்சாரத்தை 1 யூனிட் ரூ.7.01 என்ற அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்து அதானி நிறுவனத்தின் கொள்ளைக்கு வழி வகுத்தது. 1 யூனிட் ரூ. 7.01 என்று ஒப்பந்தம் செய்த போது இதர மாநிலங்களில் சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் கொள்முதல் விலை 1 யூனிட் ரூ.5.45 மட்டும்தான். இப்படியாக அதானியின் பெரும் கொள்ளைக்கு தமிழக மின்வாரியம் வழி செய்தது. ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் 648 மெகாவாட் மின் உற்பத்தியை அதானி நிறுவனம் அளிக்கவில்லை. முதலில் 248 மெகாவாட் மின்சாரம் அளித்தது. தமிழக மின்சார வாரியமும், ஒப்பந்தத்தில் கண்டவாறு 648 மெகாவாட் மின்சாரத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காததனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்த 248 மெகாவாட்டிற்கு மட்டுமே ரூ.7.01; காலதாமதமாக மின் உற்பத்தியை துவங்கிய 400 மெகாவாட்டிற்கு ஒரு யூனிட் ரூ.5 என்று கொள்முதல் விலை நிர்ணயித்து அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தைப் பெறுகிறது.
இதுதொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கிற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், “தனியார் நிறுவனத்திடமிருந்து பசுமை எரிசக்தியை பெறுகின்ற போது நீண்டகால ஒப்பந்தம் என்பது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். 2017ல் ஒப்பந்தம் போட்டபோது தமிழகத்தில் 1 அலகு ரூ.7.07 என்றும் அதே காலக்கட்டத்தில் இதர மாநிலங்கள் 1 யூனிட் ரூ.5.45 என்றும் கொள்முதல் விலை இருந்தது. ஆனால் இன்றோ சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் விலை ரூ.2.49 பைசாவாக சுருங்கியுள்ளது. இது மேலும் சுருங்க வாய்ப்புள்ளது” என்றார். அதானி நிறுவனத்திடமிருந்து அநியாய விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால் மின்வாரியத்திற்கே மன உறுத்தல் ஏற்பட்டு தமிழகத்தில் வேறு ஆதாரங்கள் மூலம் தேவைக்கேற்ப மின் உற்பத்தி கிடைக்கின்ற போது அதானியின் மின்சாரத்தை வாங்குவதை தமிழக மின்வாரியம் தற்காலிகமாக தவிர்த்தது. ஆனால் இந்திய நாட்டின் ஆள்வோர்களின் ஆசியைப் பெற்ற அதானி நிறுவனம் தனது கொள்ளையை விட்டுவிட சம்மதிக்கவில்லை. தன்னிடமிருந்து மின்சாரம் பெறுவதை தற்காலிகமாகக் கூட நிறுத்தக்கூடாது: தான் அமைத்துள்ள சூரியஒளி மின் நிலையத்தை 365 நாட்களும் உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும்; இந்த மின்சாரத்தை தமிழக மின்வாரியத்திற்கு குறைவான விலையில் மின்சாரம் கிடைத்தாலும் அந்த நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை தவிர்த்திட வேண்டும் என்ற நோக்குடன் மின்வாரிய ஒழுங்குமுறை நீதிமன்றத்திடம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சி எடுத்தது. மின்சார விற்பனையாளருக்கும் கொள்முதல்தாரருக்கும் தாவா ஏற்பட்டால் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ‘தாவா தீர்வு மனு’ என்று தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு வழக்குப் பதிவு செய்வதாக இருந்தால் அந்தத் திட்டத்தொகையில் 1 சதவீதம் வழக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். அதாவது அதானி முதலீடு செய்துள்ள ரூ.2450 கோடியில் வழக்கு கட்டணமாக ரூ.24.50 கோடி செலுத்திட வேண்டும். அப்படியெல்லாம் செலுத்தாமல் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகினாலும், அதானி நிறுவன மனுவை அனுமதிப்பது என்பது பரிசீலனையில் இருந்தது. எனினும் பின்னர் நிராகரிக்கப்பட்டது. இது நடந்தது 2017ல். இதற்கிடையில் அதானி நிறுவனம் தனது மின் உற்பத்தியை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்து மின் கொள்முதல் சம்பந்தமாக எழும் தாவாக்களை மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டுத் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அதானி நிறுவனம் தில்லியில் உள்ள மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வாங்கிட வேண்டுமென்றும் அதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பிற்பிக்க வேண்டுமெனவும் கூறியது. மேல்முறையீட்டு ஆணையம் அதானி மின் நிறுவனம் வைத்த வாதங்களை கணக்கில் கொண்டு அதானியின் குறைதீர்க்கும் மனு மீது விசாரணை நடத்தி முடிவு செய்யுமாறு தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, அந்த வழக்கு 2019 ஜூலை 1 அன்று விசாரணையை மேற்கொள்ளப்படும் என்று ஆணையிட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.