tamilnadu

img

இரத்தக் கொதிப்பு

உடல்நலத்தைப் பற்றி நாம் நினைப்பது நமக்கு நோய் வரும்போதுதான். உடல்நலம் பேணுவதில் நம் நாட்டில் செல்வந்தர்கள் கூட அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. நோய் குணமாக நாம் எப்போதும் விரும்புவது சுலபமான, துரிதமான மருத்துவமே. இவ்வகை நோக்கு ஒரு சில நோய்களுக்கு மட்டுமே பொருந்தும். தினம் மருந்துகள் உண்டு. கட்டுப்படுத்தப்படும் நோய்களில் ஒன்றான இரத்தக் கொதிப்பு நோய்க்கு இவ்வகை நோக்கு ஒத்து வராது.

ஏழ்மை நாடான நம் இந்தியாவில் வியாதிக்கான தடுப்பு முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் கேடு விளைவிக்கும் நோய்களைத் தடுப்பது இயலாத காரியம். வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமது நாட்டில் இரத்தக் கொதிப்புக்கு நாம் மருத்துவமே செய்து கொள்வதில்லை என்று கூடச் சொல்லலாம். மருத்துவம் பெறாத நிலையில், குறைந்த அளவில் அதிகம் இருக்கும் இரத்தக் கொதிப்பு நோய், அதிகமாகித் தீவிரமாகும்போது அதற்கான தடுப்பு முறைகளோ அல்லது கட்டுப்படுத்தி எடுத்துக் கொள்ளும் மருத்துவமோ பலனற்றுப் போய்விடுகிறது. அதிக இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு வாழ்நாள் குறைவுதான், அதுவும் மருத்துவமும் அளிக்காது இருந்தால், வாழ்நாளில் சராசரி சுமார் 20 ஆண்டுகள் குறைந்துவிடுகின்றன. இரத்தக் கொதிப்புள்ள நோயாளிகளில் சுமார் 80 சதவிகிதம் பேர் பொதுவாக ஏதோர் அறிகுறியையும் ஆரம்பத்தில் வெளிப்படுத்துவதில்லை. இரத்தக் கொதிப்பு தீவிரமாகும் பொழுதுதான் அறிகுறிகள் தெரியவரும். திடீரென அவர்களுக்கு, வாதம், இருதயப் பழுது இருதயத் தாக்கு, சிறுநீரகக் கோளாறு ஆகியவை ஏற்படும்.

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்தக் குழாய்களில் ஓடுகின்ற இரத்தத்தின் சுழற்சியினால் அக்குழாய்ச் சுவற்றின் மீது ஏற்படும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படும். இந்த இரத்த அழுத்தத்தை நாம் சாதாரணமாக, உடலின் வெளிப்புறத்தில் தொட்டு உணரக்கூடிய இடம், மணிக்கட்டின் மேல்புறத்தில்தான். இதைத்தான் மருத்துவர், நாடிபிடித்துப் பார்ப்பது என்று கூறுவார்கள். இரத்த அழுத்தம் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணமாக, காலையில் சிறிது குறைந்தும் மாலையில் சிறிது கூடியும் இருக்கும். கோபம், உணர்ச்சி வசப்படும் நிலை, குழப்பம், கவலை முதலிய நேரங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகும். அதற்கு மாறாக நிம்மதியாகத் தூங்கும் பொழுதும், ஓய்வுடன் இருக்கும் பொழுதும் இரத்த அழுத்தம் சற்றுக் குறைந்து காணப்படும். இரத்த அழுத்தம் குழந்தையில் இருந்து பெரியவராகும் வரை, படிப்படியாக மிகக் குறைந்த அளவில் கூடிக் கொண்டே வருவது சாதாரணமானது. உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, சுற்றுப்புறச் சூழ்நிலையில் கோளாறு, பட்டினவாசத்தின் பரபரப்பான வாழ்க்கை போன்றவையெல்லாம் உடலில் மாறுபாட்டை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். மருத்துவர் இரத்த அழுத்தத்தைக் கூறும்பொழுது இரு அளவுகளை (உதாரணமாக 120/80 மி.மீ. மெர்குரி என்ற பின்னக்கணக்கை) கூறுவதைப் பார்த்திருப்பீர்கள். அது எதைக் குறிக்கிறது என்று நமக்குக் குழப்பம் ஏற்படும். மேல் அளவு, 120 மி.மி. மெர்குரி உயரத்தில் இரத்த அழுத்தமானியில் பாதரச மட்டம் எழும்பியதைக் குறிக்கிறது; அதாவது இருதயம் இரத்தத்தை வெளியேற்றும் பொழுது அதன் இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தத்தின் அளவு ஆகும். கீழ் அளவு (80 மி.மி. மெர்குரி) இருதயம் விரிந்து சுருங்கியபொழுது, அதன் இரத்தக் குழாய்கள் ஓய்வை மேற்கொண்ட பொழுது அவற்றில் தோன்றிய அழுத்தத்தின் அளவு ஆகும். இதை முறையே சிஸ்டாலின் அழுத்தம் என்றும், டயஸ்டாலிக் அழுத்தம் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ஒவ்வொருவருடைய சரியான இரத்த அழுத்தத்தைப் பொதுவாக அறிந்து கொள்ள அவர்களுடைய வயதுடன் 90ஐக் கூட்டினால், அது அவர்களுடைய உயர்மட்ட இரத்த அழுத்தமாகும். உதாரணமாக ஒருவருக்கு 45 வயது என்றால் அவருக்கு இருக்க வேண்டிய இரத்தம் 135 மி.மி. ஆகும்.

ஒருவருக்கு இரத்தக் கொதிப்பு உள்ளதா என்று எப்போது சந்தேகப்பட வேண்டும்?

மனக்கவலை, உணர்ச்சிவசப்படல் போன்ற நேரங்களில், இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. அல்லது, எப்போதாவது 120/80 மேல் இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், இரத்த அழுத்தம் 140/90க்கு மேல் தினம் இருந்தால் பல இரத்த அழுத்த சோதனைகளுக்குப் பின்பு அவருக்கு மருத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

...தொடரும்