1921 - அடையாளம் தெரியாத அமெரிக்க வீரனின் கல்லறை, வர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்ட்டன் தேசிய மயானத்தில், குடியரசுத்தலைவர் வாரன் ஹார்டிங்-கால் திறக்கப்பட்டது. முதல் உலகப்போரில் உயிரிழந்து, அடையாளம் காணமுடியாமற்போன நான்கு அமெரிக்க வீரர்களின் உடல்கள், ஃப்ரான்சிலிருந்த நான்கு அமெரிக்க ராணுவ மயானங்களிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஒன்றை, உலகப்போரில் காயமுற்று, மிகவுயர்ந்த விருது பெற்ற எட்வர்ட் யங்கர் என்ற வீரரைத் தேர்ந்தெடுக்கச்செய்து, அது அமெரிக்காவுக்குக் கப்பல்மூலம் கொண்டுவரப்பட்டு, இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, இரண்டாம் உலகப்போர், கொரியப்போர் உள்ளிட்டவற்றில் இறந்தவர்களுக்காகவும் இவ்வாவறான நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இவற்றைப் பாதுகாக்க, கல்லறைக் காவலர்கள் என்ற பிரிவும் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் (இந்தியாவில் அமர் ஜவான் ஜோதி, புதுடெல்லி) அமைக்கப்பட்டுள்ள இத்தகைய அடையாளம் தெரியாத வீரரின் நினைவிடம் என்பதை அமைப்பதை, இங்கிலாந்தின் டேவிட் ரெய்ல்ட்டன் என்பவர்தான் முன்மொழிந்தார். முதல் உலகப்போரில் ஒன்றாகப் போரிட்ட இங்கிலாந்தும், ஃப்ரான்சும் உயிரிழந்த தங்கள் வீரர்களையும் பொதுவான மயானங்களிலேயே அடக்கம் செய்தன. இங்கிலாந்தில் அவற்றைப் பராமரிக்கும் பணியிலிருந்த போர்க் கல்லறைகள் ஆணையத்தைச் சேர்ந்த இவர், ஒரு கல்லறையில், ‘அடையாளம் தெரியாத ஓர் இங்கிலாந்து வீரர்’ என்று கையால் கீறப்பட்டிருந்ததைக் காண நேர்ந்தபோது, போரில் உயிரிழந்து, அடையாளம் காண முடியாமற்போன அனைத்து வீரர்களுக்குமாக இவ்வாறு ஒரு பொதுவான நினைவிடம் அமைக்கலாம் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார்.
இது அரசால் ஏற்கப்பட்ட அதே நேரத்தில், ஃப்ரான்சிலும் இதேபோன்ற கருத்து உருவாகியிருந்தது. 1920இல் இங்கிலாந்திலும், ஃப்ரான்சிலும் அமைக்கப்பட்ட அடையாளம் தெரியாத வீரரின் கல்லறை, அடுத்த ஆண்டே அமெரிக்காவில் அமைக்கப்பட்டதுடன், பிற நாடுகளுக்கும் பரவியது. இந்தக் கல்லறைகளில் அடையாளம் தெரியாத ஒரு வீரரின் உடல் வைக்கப்படுவதே மரபாகப் பின்பற்றப்படுகிறது. வியட்நாம் போர் முடிந்தபோது, எந்த உடலை எடுத்துவந்தாலும், டிஎன்ஏ பரிசோதனைகளின்மூலம், அது யார் என்று கண்டுபிடித்துவிட முடியும் என்ற தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. வியட்நாமில் போரிட்ட ஓர் அடையாளம் தெரியாத வீரரின் உடல் 1984இல் கொண்டுவரப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுவிட்டாலும், ஆசியப் போர்களில் காணாமற்போன வீரர்களுக்கான அமைப்பு, அந்த உடல் வான்படையின் மைக்கேல் ப்ளேசி-யுடையதாக இருக்கும் என்று கண்டுபிடித்து அறிவித்தது. அடையாளத்தை உறுதிப்படுத்த எழுந்த கோரிக்கைகளால் 1998இல் அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு, டிஎன்ஏ சோதனையில் அவர்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது!