tamilnadu

வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை 
வேலூர்,அக்.22-வேலூர், காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (25) கூலித்தொழிலாளி. இவர், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி, ஆறு வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்தார். புகாரின்படி அவரை காட்பாடி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு, வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், விஜயகுமாருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 1,500 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார். போக்சோ சட்டம் வேலூர் அடுத்த, கீழ்அரசம்பட்டையைச் சேர்ந்தவர் அஜீத் (21) கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியில், அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த புகாரின்படி, வேலூர் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, கூலித்தொழிலாளி அஜீத்தை போக்சோவில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
புதுச்சேரி,அக்.22-புதுச்சேரி நிதித்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:- புதுச்சேரி அரசின் குரூப் சி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், குரூப் பி பிரிவில் அரசிதழில் பதிவு பெறாத ஊழியர்களுக்கும் தீபாவளி போனசாக ரூ.6,908 வழங்கப்படும். அதேபோல் 3ஆண்டாக பணியாற்றும் தினக்கூலி உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.1,184 போனசாக வழங்கப்படும். சுமார் 20ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை, அக். 22- 2019-ன் தீபாவளி திருநாளை முன்னிட்டு 24.10.2019 முதல் 26.10.2019 வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சில மாற்றங்களுடன் இயக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மண்டல பேருந்து நிலையங்களில் விளம்பர பலகை மூலம் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு, சென்னையிலிருந்து, திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.    இதேபோல், சென்னையிலிருந்து, செய்யாறு, ஆரணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்,   பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.