tamilnadu

img

தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்தவரை கைது செய்திடுக!

மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், ஜூலை 20- தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்த நபரை கைது செய்யக்கோரி பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே  கோடிஅள்ளி ஊராட்சி கோடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. தலித் சமுதாயத்தை சேர்ந்த இவரின் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதியன்று அவரின் மகன் இயற்கை உபாதைக்காக ஒரு புதருக்குள் சென்றுள்ளார். அதைப் பார்த்த சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ராஜசேகர் என்பவர் சிறுவனை சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டியதோடு மட்டுமல்லாமல், கடுமையாக தாக்கியுள்ளார். இதன்பின்னர் சிறுவனையே மலத்தை கையால் அள்ள வைத்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதைத்தொடர்ந்து, இத்தகைய தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்ட ராஜசேகரை வன்கொடுமை குற்றத்தின் கீழ் உடனடியாக கைது செய்யக்கோரி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்  பென்னாகரம் பகுதிக்குழு செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி .மாதன், சோலை அர்ஜுனன், இரா. சிசுபாலன்,  வே .விஸ்வநாதன், பகுதி குழு செயலாளர்கள் சின்னசாமி, ஜி. சக்திவேல், நகர செயலாளர் எஸ்.வெல்லியங்கிரி ஒன்றிய செயலாளர் என். பி.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று, சம்மந்தப்பட்ட குற்றவாளிளை கைது செய்யக்கோரியும், தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.