புதுதில்லி,அக்.31-
நாட்டின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரும், சிறந்த நாடாளுமன்றவாதியாக பல ஆண்டுக் காலம் பணியாற்றியவருமான குருதாஸ் தாஸ் குப்தாவிற்கு சிஐடியு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது என்று பொதுச் செயலாளர் தபன் சென் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குருதாஸ் தாஸ் குப்தா (வயது 84) கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தபின் கொல்கத்தாவில் இன்று (வியாழக்கிழமை) காலை மரணம் அடைந்தார். அவருக்கு சிஐடியு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. இந்தியாவின் முதல் மத்தியத் தொழிற்சங்கமாக, தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒற்றுமையையும், போராட்டங்களையும் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தில் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையும் அறிவித்து நூறாண்டுகளுக்கு முன் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உருவானது. தோழர் குருதாஸ் தாஸ்குப்தா. ஏஐடியுசி உருவான அதே நாளில் தன் கடைசி மூச்சை விட்டிருக்கிறார். அதன் பாரம்பர்யத்தைத்தான் இன்றையதினம் ஏஐடியுசி-யும், சிஐடியு-வும் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. தோழர் குருதாஸ் தாஸ்குப்தா பல ஆண்டு காலம் ஏஐடியுசி-யின் பொதுச் செயலாளராக இருந்து வழிநடத்தினார்.
குருதாஸ் தாஸ்குப்தா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன் மாணவர் பருவத்திலேயே இணைந்தார். அவர் தேசிய அளவில் ஒரு சிறந்த மாணவர் தலைவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவராக வெகு காலம் இருந்தார். பின்னர், அவர் தொழிற் சங்க இயக்கத்துடன் இணைந்தார். தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் அவருடைய தொடர்பு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலானதாகும். குருதாஸ் தாஸ்குப்தா, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் ஆட்சிக்கு எதிராக தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, தொழிற் சங்கங்களின் ஒன்றுபட்ட மேடையை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். குருதாஸ் தாஸ்குப்தா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் சுமார் 25 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்தார். அந்த சமயத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதில் முன்னணியில் இருந்தார். இவை அவரை ஒரு முனைப்பான நாடாளுமன்றவாதியாக உருவாக்கியது.
சிஐடியு, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்காவும், நாடு மற்றும் நாட்டு மக்களின் ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும் அவர் அளித்துள்ள மாபெரும் பங்களிப்புகளை நெஞ்சில் ஏந்தி, நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவருக்கு செவ்வணக்கத்தைச் செலுத்திக்கொள்கிறது. குருதாஸ் தாஸ்குப்தா மறைவு தொழிலாளர் வர்க்கத்துக்கும், நாட்டின் ஜனநாயக இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். சிஐடியு நம்மை விட்டுப் பிரிந்துசெல்லும் தலைவருக்குத் தன் மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. ஏஐடியுசி உறுப்பினர்களுக்கும், அவரைப் பிரிந்து துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் தன் நெஞ்சார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிஐடியு சார்பில் தபன்சென் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
(ந.நி.)