விசாரணை நடத்த உத்தரவு
புதுதில்லி, மே 2- தில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள மயூர் விஹார் சிஆர்பிஎப் பட்டாலியன் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட வீரர் ஒருவருக்கு கடந்த ஏப்.21-ஆம் தேதி அன்று கொரோனா உறுதியானது. அவர் தில்லியில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூலம் பலருக்கும் கொரோனா பரவியுள்ளது.
மே 1-ஆம் தேதி 12 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்னர் மேலும் 45 பேருக்கு உறுதியானது. கடந்த ஏப்.24-ஆம் தேதி 24 பேருக்கும், அதற்கு அடுத்த நாள் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை 122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 380 வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் 100 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. கிழக்கு தில்லி மயூர் விஹாரில் உள்ள சிஆர்பிஎஃப் அணி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தொற்று பரவியது எப்படி, என்ன குறைபாடிருந்தது என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள், மண்டவாலியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த அசாமைச் சேர்ந்த 55 வயது சார்பு ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி தில்லி சபதர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.