நமது ஊரில் எந்தப் பள்ளி நல்ல பள்ளி என்றால், எங்கு அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறார்களோ அதை நோக்கிதான் விரல்கள் நீளுகின்றன. தங்கள் குழந்தைக,ள் படிப்பை நிறைவு செய்த பிறகுதான் பல பெற்றோர்கள் பள்ளியைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அதுவரையில் நேர்த்திக்கடன் போன்று பணத்தைக் கட்டிக் கொண்டே இருக்கின்றனர். அது போன்ற ஒரு பள்ளியில் தனது மகளுக்காக தாய் ஒருவர் சண்டை போட்டியிருக்கிறார். 7 ஆம் வகுப்பில் படிக்கும் தனது மகள், முதல் யூனிட் டெஸ்டில் ஒரு மார்க்கைத் தவற விட்டது பெரும் கொலைக்குற்றம் போலப் பார்த்திருக்கிறார். அதில் ஒரு வினா, ஆறாம் வகுப்புத் பாடத்தில் இருந்து கேட்டிருந்ததால்தான் சண்டைக்குச் சென்றுவிட்டார். என்ன மேடம், உங்க பொண்ணுதான் முதல் மார்க் என்று ஆசிரியை சொன்னது அவரது காதுகளில் ஏறவில்லை. எது மெரிட் என்பதை இப்படி சில பெற்றோர்கள் தீர்மானித்து வைத்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை அதிகமானால், ஆசிரியர்களின் போக்கே மாறிவிடும். பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் இவர்களின் குரல்கள் உயர்ந்தால், பள்ளி நிர்வாகம் பெற்றோர் கேட்பது போல் செய்வதில் உங்களுக்கு என்ன சிரமம் என்று ஆசிரியர்களிடம் அக்கூட்டத்திலேயே கேட்டு விடுவார்கள். அவர்களுக்கு பெற்றோர்கள் வெறும் ஏடிஎம்தான்..
முந்தைய வகுப்புகளில் படித்தவற்றை மறந்துவிட்டு அடுத்த வகுப்புகளில் உள்ளவற்றை மட்டும் மனப்பாடம் செய்து மார்க் வாங்கிச் செல்வது வருங்காலத்திற்கு உதவாது என்ற ஆசிரியர்களின் எண்ணத்தில் இதுபோன்ற பெற்றோர்கள் மண் அள்ளிப் போட்டு விடுகிறார்கள். பட்டம் படிக்கையில் தனது குழந்தை ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற நினைப்பில் பயிற்சி மையங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு எந்த ஆறாம் வகுப்புக் கேள்வியை கேள்விக்குள்ளாக்கினாரோ அந்தக் கேள்வியில் இருந்தே பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. நம்முடைய மனநிலை எவ்வளவு மார்க் என்பதைத் தாண்டி யோசிக்க மறுக்கிறது. அப்படி யோசிப்பவர்களைக் காலத்திற்கு ஒவ்வாதவர்கள் என்ற முத்திரை குத்தவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும், அடுத்த வகுப்பிற்குச் செல்கையில் கற்றதை மறந்துவிட்டு, அடுத்த வகுப்பில் எவ்வளவு மார்க் எடுக்க முடியும் என்ற சிந்தனையோடு செல்வது காலத்தின் தேவை என்று சொல்லப்படுகிறது.
ஆனால், பாடங்களோ முந்தைய வகுப்பின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. தொடர்ச்சியாகக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், கற்றதை நினைவில் கொள்ளும் மாணவர்கள்தான் பின்னாட்களில் தொடக்கக் கட்டங்களிலேயே வெற்றியை ஈட்டுகிறார்கள். பயிற்சி மையத்திற்கு வந்த தேர்வர் ஒருவரைத் தொடர்ந்து பார்த்து வந்தேன். அனைத்து வகுப்புகளிலும் உற்சாகத்தோடு பங்கேற்கும் அவர், கணித வகுப்பில் மட்டும் தலையைத் தொங்கப்போட்டவாறு அமர்ந்திருந்தார். அது ஆச்சரியமாக இருந்தது. மதிய உணவு இடைவேளையின்போது அப்படிக் கவனிக்காமல் அமர்ந்தது குறித்துக் கேட்டபோது, “அவர் குறுக்குவழி(short-cut) சொல்லித் தர்றாரு.. இந்தக் கணக்கெல்லாம் வழக்கமான முறைலயே என்னால வேகமாகப் போட முடியும்” என்றார். பள்ளியில் சொல்லிக் கொடுத்த வழிமுறை அப்படியே அவருக்கு நினைவில் இருந்தது. அவர் எழுதிய முதல் தேர்விலேயே வெற்றி பெற்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடந்தது. எழுதிவிட்டு வெளியில் வருபவர்களில் சிலர், “பெரியார் பற்றிலாம் கேட்டுருக்காங்க” என்று மிரட்சியுடன் சொன்னார்கள். அவரைப் பற்றி ஏழு வினாக்கள் இருந்தன. சிலர், பெண் என் அடிமையானாள் புத்தகத்தை உடனடியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றவாறே நகர்ந்தனர். கல்லா கட்டும் பயிற்சி மையங்களோ, அய்யோ... நாம் ஏன் பெரியாரைச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று கேட்டுவிட்டால் என்ன ஆவது என்று கருதி, அவரைப் பற்றிய தலைப்பில் தனியாக வகுப்பே போட்டு விட்டார்கள். அண்மைத் தேர்வில் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார் என்று கேட்டு விட்டார்கள். பகத் சிங் பற்றிய சிறப்பு வகுப்புக்கு பயிற்சி மையங்கள் தயாராகின்றனவா என்று கேட்க வேண்டும். எந்திரத்தனத்தை நோக்கி தேர்வர்களைத் தள்ளுகிறார்கள். சில்வண்டுகள் மட்டுமல்ல, சிறுத்தைகளும் சிக்கிக் கொள்கின்றன.