அங்கிள்... என்ன கண்ணுல மத்தாப்பு..
வாம்மா... நாம போன வாரம் பேசிட்டிருந்தது ஒரு பெரிய தலைவர் காதுல விழுந்துருச்சு..
என்ன சொன்னாரு..
நிலமை முன்னேற்றம் தான். ஆசிரியரை மிஞ்சும்.. மாணவி.... பலே,பலே..னு சொன்னார்..
நன்றி சொன்னேன்னு சொல்லுங்க.. ஆனா, மிஞ்சுறதுதான சரியானதாவும் இருக்கும்..
ஆமா.. ராமகாந்த் ஒண்ணும் பெரிய பிளேயர்லாம் இல்ல.. ஆனா சச்சின அவருதான் உருவாக்குனாரு..
ஏகலைவன் கதை தனி அங்கிள்.. என்ன ஆட்டம் காட்டுனாரு.. அதே நேரத்துல பெரிய ஆட்டக்காரர்களும் பின்னாடி, பயிற்சியாளர்களா ஜொலிச்சிருக்காங்க... யுவ்ராஜ்சிங் பத்தி செய்தி வந்துருக்கு.. படிச்சுட்டீங்களா..?
படிச்சேன்.. அபிஷேக்குக்கு அவர்தான வழிகாட்டி..
அவரேதான்.. யுவ்ராஜ்சிங் புற்றுநோயால பாதிக்கப்பட்டு, அதுலருந்து மீண்டவர்.. விளையாட்டு மைதானத்துல ரத்த வாந்தி எடுத்தவர்..
அப்படியா.. யுவ்ராஜ் மைதானத்திலயே ரத்த வாந்தி எடுத்தாரா.?
ஆமா, அங்கிள்.. அத விட முக்கியமானது.. இந்த அபிஷேக் சர்மா, தன்னோட ரெண்டாவது சர்வதேச ஆட்டத்துல சதம் அடிச்சுருக்காரு.. இந்தியாவோட வெற்றிக்கு அவர்தான் காரணமா இருந்துருக்காரு..
முத ஆட்டத்துல முட்டையாமே..
உங்க தலைமுறை முட்டை மார்க்க ரொம்ப கேலி பண்ணுவீங்களே.. ஒரு படத்துல கூட, பையனோட படிப்பு பத்தி அப்பா விசாரிக்குறப்ப, கடைல இருந்து வந்த பையன், அம்மா, முட்டை வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்வான்.. தியேட்டரே அதிரும்..
அட இது எங்க காலத்து படமாச்சே.. பாத்திட்டியா..
இல்ல.. படிச்சேன்.. ஆனா முத ஆட்டத்துல முட்டை வாங்குனப்ப யுவ்ராஜ் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாராம்... ஏன்னா, இதுக்கப்புறம் அத விட அதிகமாத்தான் அடிப்பாருன்னு சொன்னாராம்... அடுத்த ஆட்டத்துல சதம்.. அவருக்குப் பெருமையா இருந்துச்சாம்.. அதப்படிச்சவுடன எனக்கு உங்க நினைவுதான் வந்துச்சு..
முத தேர்வுல ஜீரோதான் நல்ல மார்க்குனு நா சொன்னதச் சொல்றியா..?
ஆமா... ஆனா அதுக்கப்புறம் வாங்குறதெல்லாம் கூடிக்கிட்டே போகனும்னு சொன்னீங்க.. ஒண்ணு கவனிச்சிட்டே வர்றேன்... உங்க பேச்சுல ஒரு வித்தியாசம் தெரியுதே..
வித்தியாசமா.. என்ன..?
பெயர்களச் சொல்றப்ப யுவ்ராஜ்னு சொன்னீங்க.. “சிங்”கச் சேக்கலை.. சச்சின், ராமகாந்த், அபிஷேக்னுதான் சொன்னீங்க...
சாதியக் குறிக்குற அடையாளங்கள்தான அது... விட்டுட்டுச் சொல்லிப் பாத்தேன்.. தமிழ்நாட்டுலதான் பெயருக்குப் பின்னாடி சாதிப்பெயர்கள் போடுறத நீக்கிருக்கோம்... மாறினாலும் சாதி வெறி, சாதி உணர்வுலாம் நிறைய இருக்கத்தான் செய்யுது..
மத்த எல்லா மாநிலத்துலயும் இருக்குனு ஒரு தடவ பள்ளிக்கூடத்துல சார் சொன்னாரு... எல்லாத்துலயும் கேரளா முன்னாடி இருக்கறதுனால அங்க எப்புடி இருக்குனு பாக்கலாம்னு நெனச்சு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெயரையெல்லாம் எடுத்துப் பாத்தேன்..
யாரோட பெயரெல்லாம் எடுத்துப் பாத்த?
உடனே கிடைக்குறது, முதல்வர், அமைச்சர்கள்தான... அதுல ஒருத்தர் பேருக்குப் பின்னாடியும் சாதிப்பெயர் இல்ல... சரி.. எம்.எல்.ஏ. பட்டியலப் பாக்கலாம்னு தேடுனேன்... மொத்தம் 140 பேர்ல, ஒரே ஒருத்தர்தான் சாதிப்பெயரப் பின்னாடி வச்சுருக்காரு..
இது அடையாளங்கள்தான...கேரள சமூகத்துல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு.. சாதி வெறி குறைவு.
நாராயண குருவப் பத்தி நாங்க படிச்சிருக்கோம்.. இடதுசாரி இயக்கங்களோட தாக்கம் பத்தி நெறய செய்திகள் வருதே... இப்ப கூட அமைச்சர் பொறுப்புலருந்து வெளில போற அன்னிக்கு காலனிங்குற வார்த்தையை நீக்குற கோப்புல தன்னோட கடைசிக் கையெழுத்தப் போட்டுட்டு ராதாகிருஷ்ணன் போயிருக்காரு..
காலனினா குடியேற்றம்னு சொன்னாக்கூட, காலனி நாடுகள்னா ஏகாதிபத்திய நாட்டுக்கு அடிமை நாடுகள்னுதான் அர்த்தம்... உள்ளூர்ல காலனினா, உள்ளூர்க்குள்ள அடிமைனு வந்துரும்.. அதனாலதான் அந்த அடையாளத்த தூக்கி எறிஞ்சுருக்காங்க..
ஆமா... அடையாளத்துல கூட மன்னராட்சியயும், குடியரசையும் காட்டுற கோல்கள் இருக்குனு விவாதம் போயிட்டு இருக்கு.. ரெண்டையும் ஒண்ணா பாக்க முடியாதுல்ல... நல்லத வெச்சிக்கிட்டு, கெட்டதத் தூக்கி எறிய வேண்டியதுதான்..
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே ... அப்படினு சொல்ல வர்றியா..?
அதுலயும் நல்லது, கெட்டதும் பாத்துக்கலாம், அங்கிள்... அடுத்த வாரம் பாக்கலாம்.. போயிட்டு வர்றேன்..