சென்னை, மார்ச் 26- தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான தேச நலனுக்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நாடு முழுக்க பொது வேலை நிறுத்தம் பெற அனைத்து தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்து தொழிற்சங்கங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தொழிற்சங்க தலைவர் இரா.குசேலர் மற்றும் கி.நடராஜன் (தொமுச) டி.எம். மூர்த்தி (ஏஐடியுசி), வி.குமார் (சிஐடியு), மு.சுப்பிரமணியன் (எச்எம்எஸ்) டி.வி.சேவியர் (ஐஎன்டியூசி), வி.சிவக்குமார் (ஏஐயுடியுசி) எம்.திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு) இரா.அந்திரிதாஸ் ( எம்எல்எப்) பேரறிவாளன் (எல்எல்எப்), ஏ.எஸ்.குமார் (எல்டியுசி) ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒன்றிய-மாநில பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், வங்கி, காப்பீடு போன்ற நிதி நிறுவனங்கள், போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் போன்றவற்றில் 15 நாட்களுக்கு முன்பே வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. இவை மட்டுமின்றி ஆட்டோ, கட்டிடம், பீடி, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட ஏராளமான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளின் தொழி லாளர்கள், வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என அண்மையில் தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வேலை நிறுத் தத்தை ஆதரித்து ஒருமைப்பாட்டு இயக்கங்களை நடத்து கிறார்கள். அதுபோன்று ரயில்வே தொழிலாளர்களும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். கடைகள் வணிக நிறுவனங்களை திறக்காமல் மூடி வைத்து, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து வணிகர்களையும், வணிகர் சங்கங்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.