tamilnadu

img

அரவம் ஆட்டேல் - கோவி.பால.முருகு

அன்று வரதராசன் வகுப்பறைக்குள் நுழையும் போது வேலுவைச் சுற்றி நின்று கொண்டு மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.சில மாணவர்கள் அலறிக் கொண்டு பின்னே ஓடினர்.

வகுப்பின் உள்ளே நுழைந்த ஆசிரி யரைப் பார்த்தவர்கள் அவரவர் இடத்திற்கு  வேகமாக ஓடி அமர்ந்தனர்.வேலு அவசர  அவசரமாக தன் கையில் இருந்த டிஃபன்  பாக்சைப் பையில் மறைத்தான்.அதிலி ருந்தே வேலு டிஃபன் பாக்சிலிருந்து எதையே காட்டியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். “டேய்..வேலு டிஃபன் பாக்சுல என்ன வச்சிருக்க?டிஃபன் பாக்சைக் கொடு”  ”வேண்டாம் சார்.. அதில ஒன்னு மில்ல”  .”சரி ஒன்னுமில்லேன்னா எங்கிட்டக் கொடு நான் பார்க்கிறேன்” .”இல்ல சார் நானே காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு வரதராஜன் மேசை  அருகே வந்தவன்,மேசை மீது டிஃபன் பாக்சை வைத்துத் திறந்தான். அலட்சியமாக நாற்காலி எதிரில் நின்றி ருந்த வரதராசன் வேலு திறந்த டிஃபன் பாக்சிலிருந்து தலையை வெளியே நீட்டிய இரண்டு நல்ல பாம்புக் குட்டி களைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு  வெளியே ஓடினார். “அடப் பாவி..நல்ல பாம்புக் குட்டியைப்  பிடித்து வைச்சுருக்கியே!

கடிச்சா... செத்துல்லடா‌ போயிடுவ” “அது கொத்துனாலும் ஒன்னும் ஆகாது  சார்” “எப்படிடா..?” “சார்..பிடிச்ச உடனேயே அதனுடைய விஷப் பல்லைப் பிடுங்கிவிட்டேன்.அதனால் கொத்தினாலும் ஒன்றும் ஆகாது” என்றவன் சர்வ சாதாரணமாக பாம்புக் குட்டியின் உடலைப் பிடித்துத் தூக்க அது தன்னுடைய சிறிய படத்தை எடுத்துச் சீறியது. “டேய்...வேண்டான்டா..வேண்டான்டா”என்று வரதராசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே படத்தின் முன்னே கையை நீட்டினான்.கையில் ஒரு கொத்து கொத்தியது.வரதராசன் நடுங்கிப்போனார். “சார்... பயப்பட்டீங்களே... பாத்தீங்களா... பல்லு படல” என்று கையைக் காட்டினான். “சரிடா…முதல்ல பிடிக்கும் போது கொத்திவிட்டால் என்ன செய்வாய்?” “பிடிக்கும்போது எப்படிப் பிடிக்க  வேண்டும் என்பது எனக்குத் தெரியும் சார். எங்கப்பா பாம்பு பிடிக்கிறவருதான். யார் வீட்டிலேயாவது, தோட்டத்திலேயாவது பாம்பைப் பார்த்தால் எங்கப்பாவைத்தான் கூப்பிடுவார்கள். அவரும் போய் பாம்பைப்  பிடித்து வருவார். நல்ல பெரிய பாம்பாக இருந்தால் அதன் தோல் ஆயிரம் இரண்டா யிரம் போகும்”என்றான் வேலு. “டேய்..நீ எப்படியாவது இருந்து தொலஞ்சிட்டுப் போ.பள்ளிக்கூடத்திற்கு இனிமேல் எடுத்து வந்தது தெரிந்தால்.. தலைமை ஆசிரியரிடம் சொல்லி உனக்கு  டிசி கொடுத்து அனுப்பிடுவேன். ஜாக்கி ரதை. இப்ப வெளியில போயி ரொம்ப தூரத்தில இந்த ரெண்டு பாம்பையும் விட்டு விட்டு வரவேண்டும்”என்று சொல்லி வெளியே விரட்டி விட்டார். சிறிது நேரத்தில் வந்த வேலுவின் டிஃபன் பாக்சைப் பார்த்து ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வகுப்பில் அனுமதித்தார்.

 “வேலு..ஒன்னு தெரிஞ்சிக்க. எவ்வ ளவு பெரிய திறமையான ஆளா இருந்தா லும் என்றைக்காவது ஒருநாள் பாம்பிடம்  கடிபட நேரிடும். ஒரு வாரத்திற்கு முன்னாடி  தொலைக்காட்சி செய்தியிலே காட்டி னாங்களே அதப் பாக்கலியா?உன்ன மாதிரிதான் ஒரு பையன் நல்ல பாம்பை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.அவன் சற்று ஏமாந்த நேரத்தில் கையில் கொத்திவிட்டது. மருத்துவ மனைக்குச் செல்வதற்குள் இறந்துவிட்டான்.அதனால தயவுசெய்து உன் நன்மைக்காகச் சொல்றேன் இனிமே பாம்பு பிடிக்கும் செயலில் ஈடு படவே கூடாது சரியா?”என்றார் வரத ராசன். ஒரு வாரம் கழித்து வேலுவின் நண்பன்,  “ஐஞ்சு நாலைக்கு முன்னாடி பாம்பு  பிடிக்கப் போன இடத்தில பெரிய கரு நாகம் கடிச்சிடுச்சி சார்…உடனே அவரும் செய்ய வேண்டிய முதலுதவியை எல்லாம்  செஞ்சிகிட்டாரு.அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க நூற்று எட்டு ஆம்பு லன்சுக்குப் ஃபோன் பண்ணுனாங்க.உடனே ஆம்புலன்சும் வந்திடுச்சி.நம்ம  ஊர் அரசு மருத்துவ மனையில ஊசி யெல்லாம் போட்டாங்க..அப்புறம் நிலம மோசமா இருக்கு உடனே கடலூர் பெரி யாஸ்பத்திரிக்குக் கொண்டுகிட்டுப் போகச் சொல்லிட்டாங்க..போற வழியி லேயே இறந்துட்டாரு சார்” என்றான். அதைக் கேட்ட வரதராசன், அரவம் ஆட்டேல் (பாம்போடு விளையாடாதே) என்று முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து தான் சொல்லியிருக்கிறார்கள் என்றார்.