tamilnadu

img

தப்பிப் பிழைத்தன திமிங்கிலங்கள்

திமிங்கிலங்களை வணிக நோக்கங்களுக்காக வேட்டையாடும் ஒரு சில நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. இந்நாடு இப்போது 2024ஆம் ஆண்டுடன் இதை முழு வதும் கைவிடத் தீர்மானித்துள்ளது. திமிங்கில இறைச்சியின் மீதுள்ள மக்களின் ஆர்வம் குறைந்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இதுபோல திமிங்கிலங்களை வேட்டையாடும் மற்ற உலகநாடுகள். 2019-2023 காலகட்டத்தில் நீலத் திமிங்கிலங்கள் தவிர அளவில் பெரிய 209 பின் இனத்தைச் சேர்ந்த திமிங்கிலங்களை யும், அளவில் மிகச்சிறிய இனமான 217 மிங்க் வகை திமிங்கிலங்களையும் வேட்டையாட அரசு ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது. இது இக்காலகட்டத்திற்குரிய வருடாந்திர ஒதுக்கீடு. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டைக்காக உரிமம் பெற்றிருந்த இரண்டு கம்பெனிகள் வேட்டையாடுவதை நிறுத்திக்கொண்டன.  

இந்த காலகட்டத்தில் 2021இல் ஒரே ஒரு மிங்க் திமிங்கிலம் மட்டுமே வேட்டையாடப்பட்டது. இந்த வேட்டையாடல் காரணமாக கடல்வாழ் உயிரினங்களில் மிகப் பெரிய பாலூட்டி கள் வகையைச் சேர்ந்த திமிங்கிலங்களின் பாதுகாப்பிற்காக யு கே நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திமிங்கில பாதுகாப்பு சங்கத்தின் (International Whaling Commision IWC) உறுப்பினர் பதவியையும் ஐஸ்லாந்து ராஜினாமா செய்தது. வணிக நோக்கங்களுக்காக இந்த உயிரினங்களை வேட்டையாட அனுமதி கிடைத்ததுடன் மக்களிடையில் இவற்றின் இறைச்சிக்கான தேவையும் குறைந்தது.

2006இல் அரசு முதல் முதலில் திமிங்கிலங்களை வேட்டையாட அனுமதி அளித்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன. சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மீன்பிடி தடை உள்ள கடலோரப் பிரதேசங்களின் பரப்பு  அதிகமானது. இதனால் திமிங்கிலங்களைப் பிடிக்க வெகு தூரம் செல்லவேண்டியதாயிற்று. இது வேட்டைக்கான செலவை அதிகரித்தது.  ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தர மதிப்பீடு உயர்த்தப்பட்டதுடன் இந்த உயிரினங்களின் இறைச்சி ஏற்றுமதியும் குறைந்தது. இதனால் இப்போது அங்கு இந்த  அற்புத உயிரினங்களின் வேட்டை முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளது. தப்பிப் பிழைத்தன திமிங்கிலங்கள்!