tamilnadu

img

புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அதிநவீன கேன்சர் மையம் துவக்கம்

புற்றுநோய் சிகிச்சைகளுக்கு  அதிநவீன கேன்சர் மையம் துவக்கம்

திருச்சி காவேரி மருத்துவமனையில்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5 -
திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் காவேரி கேன்சர் இன்ஸ்டியூட் என்ற பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை அமைச்சர் கே.என். நேரு வியாழனன்று திறந்து வைத்தார். 
புதிய மருத்துவமனை குறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மருத்துவர் செங்குட்டுவன் கூறுகையில், “இந்த புதிய மருத்துவமனையில் யூனோ தெரப்பி மற்றும் துல்லிய கிமோதெரபி உள்பட பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்காக 50 படுக்கையைக் கொண்ட ஒரு பகல் நேர சிகிச்சை மையமும் உள்ளது.
நகரிலேயே ட்ருபீம் (TrueBeam™) என்னும் மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை அமைப்பு இம்மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மூளை, நுரையீரல், தலை மற்றும் தொண்டைப் பகுதி போன்ற உறுப்புகளில் உள்ள நுண்ணிய கேன்சர் கட்டிகளையும், குறைந்த பக்க விளைவுகளுடன் குணப்படுத்த முடியும். விரைவில் புற்றுநோய்க்கான அணு மருத்துவத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இனி அதிநவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவை, தென் தமிழகத்தில் உள்ள நோயாளிகளுக்கு இல்லை” என்றார்.
கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் அனிஷ் கூறுகையில், “இங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சை திட்டமும் பல்வேறு புற்றுநோயியல் நிபுணர்களின் குழுவால் கூட்டாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த, பிரத்யேக சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது” என்றார்.