tamilnadu

img

மாதம் ரூ.5000க்கு குறைவாக சம்பாதிப்போர் அதிகரிப்பு

சென்னை, டிச.19 - 5 ஆயிரம் ரூபாய்கும் குறைவாக மாத வருவாய் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதன்காரணமாக தொழில் பாதிப்பு, வேலை இழப்பு, வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது. சிறு, குறு, முறைசாரா  தொழில்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. ஏழை எளிய மக்கள் குடும்பம் நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தச்சூழலில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கும் முன்பும், பின்பும் பெண்கள் வாங்கி யுள்ள கடன், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடு முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  ஆய்வு நடத்தியது.

அதன்ஒரு பகுதியாக தமிழகத்தில் 30 மாவட்டங்க ளில் 1073 பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை வெளி யிட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அத்தியாவசிய தேவைகளுக்காக வும், நிலம், நகை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பென்சன் புத்தகம் போன்றவற்றை அடகு வைத்தும் பெண்கள் கடன் பெற்றுள்ளனர். இந்த  காலத்தில் ஆண்களை விட, பெண்கள் பெயரிலேயே அதிக கடன்  பெறப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபாய்க்கு  குறைவாக மாத வருமான ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை 20 விழுக் காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட  நுண்நிதி நிறுவனங்கள் செயல்படு கின்றன. பெரும்பகுதியான பெண்கள் நுண் நிதி நிறுவனங்கள், தனியார் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்றுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 7 விழுக்காடு வட்டிக்கு கடன் பெறும் நுண்நிதி நிறுவனங்கள், அதை பெண்களுக்கு 27 விழுக்காடு வட்டியில் கொடுக்கின்றன. கடனை வசூலிக்க நுண் நிதி வசூல் தாரர்கள் மிக மோசமாக பேசுகின்றனர்.

காலை 6 மணிக்கே வீட்டிற்கு வந்து நிற்பது, இரவு 11 மணி வரை வாசலில் காத்திருப்பது போன்ற நெருக்கடிகளை கொடுக்கின்றனர். இதனால் அவமானம்  தாங்காமல் சிலர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். கொரோனா காலத்திற்கு முன்பை விட, ஊரடங்கு காலத்தில் பெற்றுள்ள கடன்களே அதிகமாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி வசூலை நிறுத்த வேண்டும், சகஜ நிலை திரும்பும் வரை கடனை திருப்பி செலுத்த காலக்கெடு வழங்க வேண்டும். கடனுக்கு வட்டி மற்றும் வட்டிக்கு வட்டி வசூல் செய்ய தடுக்க  கோரி உயர்நீதிமன்றத்தில் மாதர் சங்கம்  வழக்கு தொடுத்தது. இதனடிப்படையில் 6 மாத காலத் திற்கு கடன் வசூலிக்க நீதிமன்றம் தடை விதித்தது.

ரிசர்வ் வங்கியும் ஆறு  மாத காலம் கடனை கட்டுவதற்கான அவகாசமும், குறிப்பிட்ட காலத்தில் வட்டி வசூல் செய்வும் தடை விதித்தது.  தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்க ளும் உத்தரவிட்டனர். அதனை மீறி நுண் நிதி நிறுவனங்கள் கடனை வசூல் செய்ததோடு, வட்டி, வட்டிக்கு வட்டியை வசூல் செய்கின்றன. இதனால் தனிப் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. எனவே, நுண்நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,

ஊரடங்கு காலத்தில் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், முழுமையான வேலை வாய்ப்பு வருமானம் கிடைக்கும் வரை  கடனை திருப்புவதற்கு கால அவகாசம்  வழங்க வேண்டும். பெண்கள் தொழில் துவங்கு வதற்கு வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்க வேண்டும். தனித்து வாழும் பெண்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க வேண்டும், நுண்நிதி நிறுவ னங்களின் செயல்பாட்டை கண்காணிப் பதற்கு மாவட்ட அளவில் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத் தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படையில் 200 நாள் வேலையும் 600 ரூபாய் கூலியும் வழங்க வேண்டும்;

அதற்கான் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை கொண்டு வர வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 7,500 ரூபாய் வீதம் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சங்கத்தின் மாநிலப் பொருளா ளர் ஆர்.மல்லிகா, மாவட்டச் செயலாளர் கள் ம.சித்ரகலா (தென்சென்னை), வி.தனலட்சுமி (மத்தியசென்னை), பாக்கியலட்சுமி (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் மஞ்சுளா, பவானி ஆகியோர் உடனிருந்தனர்.