சென்னை,பிப்.26- தேசிய கல்விக்கொள் கையை நிராகரிப்பதோடு தமிழ்நாட்டிற்கு என தனிக்கல்விக்கொள்கையை உருவாக்கவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் சார்பில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு அளித்துள்ள மனு வருமாறு: தேசிய கல்வி கொள்கை அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் தமிழக அரசு எதிர்த்து வருவதைக் இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. மேலும் பட்டப்படிப்பு பயில முதநிலை தகுதிகளை (நுவேசல சுநளூரசைநஅநவேள) நிறைவு செய்திருக்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு பயில நுழைவுத் தேர்வு கட்டாயம் தற்போதுள்ள 10 + 2 + 3 என்ற முறையை மாற்றுவது. மூன்றாண்டு படிப்பில் முதலமாண்டு நிறுத்தினால் சான்றிதழ் இரண்டாம் ஆண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றாமாண்டு முடித்தால் பட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை கொண்டுவருவது. ஒரு பருவத்தின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப்படாமல் தற்காலிக இடைநிறுத்தம் செய்யும் ஒன்றிய அரசின் வரைவு கொள்கை மாணவர்களை கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றுகிறது.
இது மாணவர் நலனுக்கு எதிரானது. ஆகவே இக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது ஆகவே தமிழகத்திற்கு தனிக் கல்வி கொள்கை உருவாக்குவோம் என்பதையும் வரவேற்கிறோம் ,அதே நேரத்தில் தேசிய கல்விக்கொள்கை கல்வியை வணிகமயப்படுத்துகிறது. வகுப்புவாதத்தை புகுத்துகிறது, கல்வியை மையப்படுத்துகிறது, மாநில உரிமையை பறிப்பது என கல்வித்துறையை சீரழிக்கும் விதமாகவும், 100 ஆண்டுகள் கல்வியை பின்னுக்கு இழுக்கும் வகையில் இருப்பதால் இக்கொள்கையை தமிழக அரசு கராராக நிராகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வியிலும் தேசியகல்விக்கொள்கையின் அம்சங்களை அமுல்படுத்துவதை கைவிட வேண்டும். மேலும் கல்வியாளர்கள் பொதுமக்களின் கருத்தினை பெற்று விரைவில் ஒன்றிய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அனுப்பப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.கல்வி குறித்தான கருத்துகளை பெறும்போது இந்திய மாணவர் சங்கத்தின் கருத்திணையும் அரசு பெறவேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே முதலில் வெளியிட்டது. அதை முதலில் ஆசிரியர்கள்,கல்வியாளர்கள், பாரதி புத்தகாலயத்தோடு இணைந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட அமைப்பு இந்திய மாணவர் சங்கம். மேலும் அதன் ஆபத்தை கருத்தரங்கம், பிரச்சாரம்,போராட்டம் என மக்கள் மத்தியில் கொண்டு சென்றதோடு தற்போதுவரை கல்வி நிலையங்களில் தொடர் போராட்டத்தை இந்தியா முழுவதும் இந்திய மாணவர் சங்கம். முன்னெடுத்து நடத்தி வருகிறோம். ஆகவே தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கையை உடனடியாக உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் முதலமைச்சரின் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரி ராம்பிராதப் ஆகியோரிடம் இந்திய மாணவர் சங்கம் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் மாநிலத் துணைச் செயலாளர்கள் ஆறு.பிரகாஷ்,கோ.அரவிந்தசாமி ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.