சென்னை,மே 6- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட புதிதாக படகு இறங்குதளம் ரூ.7 கோடியில் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன்,“ ஆன்மிகச் சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற தமிழகத்தில் முக்கிய கோயில்களின் வரலாற்று சிறப்புகளை காட்சிப்படுத் தும் வகையில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளிக்காட்சி, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்” என்றார். தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்று அழைக்கப்படும் மருத்து வக் குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
அவர்களின் எண்ணிக்கை மற்றும் தங்கும் கால அளவை அதிகரிப்பதற்கு, பல்வேறு வசதிகள் ரூ.15 கோடியில் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறினார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியது வருமாறு:- கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாதலங்கள் ரூ.6.60 கோடி செலவில் நவீன வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் படகு சவாரி, நடை பாதைகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். புதுக்கோட்டை முத்துகுடா கடற்கரை பகுதி, நீர் விளை யாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டு கள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். சுற்றுலா துறை பிற துறைகளுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும் புதிய சாலைகள் அமைத்தல், தற்போது உள்ள சாலைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.100 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்பில் ரூ.50 கோடியிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.